

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெறும் 47 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்று, மூன்றாவது இடத்தைப் பிடித்தது. அதிலும் 6 எம்எல்ஏ-க்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெக-வில் இணைந்து விட்டனர். இதனால் சட்டமன்றத்தில் அதிமுகவின் பலம் 41 ஆக குறைந்துள்ளது. மேலும் சில எம்எல்ஏ-க்கள் ராஜினாமா செய்து விட்டு தவெக-வில் இணைய இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில் மெல்ல மெல்ல அழிவுப் பாதையில் சென்று கொண்டிருக்கும் அதிமுக கட்சியை மீட்டெடுக்க, கடந்த வாரம் திருவண்ணாமலையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்தினார் பொதுச் செயலாளர் இபிஎஸ்.
இதனைத் தொடர்ந்து இன்று (ஜூலை 6) முதல் வருகின்ற ஜூலை 9ஆம் தேதி வரை மாவட்ட நிர்வாகிகளுடன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஆலோசனையை மேற்கொள்ள உள்ளார் இபிஎஸ்.
அதிமுகவின் முக்கிய தலைவர்கள் ஒவ்வொருவராக கட்சியிலிருந்து வெளியேறுவது, அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. வெகு விரைவில் தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. அதனைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலும் நடக்க உள்ளது. இதனால் வரவிருக்கும் தேர்தல்களில் வெற்றியைப் பெற இபிஎஸ் கடுமையான முயற்சிகளை எடுத்து வருகிறார்.
இதன் முதல் படியாக தற்போது மாவட்ட நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனையை மேற்கொண்டு வருகிறார். கடந்த வாரம் திருவண்ணாமலையில் இபிஎஸ் பேசியபோது, “துரோகிகள் மட்டுமே அதிமுகவை விட்டு வெளியேறுகின்றனர். அதிமுகவின் பலமே தொண்டர்கள் தான். புதியவர்களுக்கு பதவி கொடுக்கப்படும்” எனப் பேசினார்.
இந்நிலையில் இன்று (ஜூலை 6) தஞ்சை மற்றும் சிவகங்கை மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார் இபிஎஸ். நாளை (ஜூன் 7) திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனையை நடத்தவுள்ளார்.
ஜூலை 8-ல் தருமபுரி, கிருஷணகிரி மற்றும் ஈரோடு மாவட்ட நிர்வாகிகளுடனும், ஜூலை 9-ல் நெல்லை மற்றும் திருச்சி மாவட்ட நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்தவுள்ளார் இபிஎஸ்.
இந்த ஆலோசனையில் தேர்தல் முடிவுகள் மற்றும் அதிமுகவின் அடுத்த கட்ட வளர்ச்சியை பற்றி விவாதிக்க போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
அதிமுகவின் மூத்த தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக கட்சியிலிருந்து வெளியேறும் சூழலில், கட்சியை பலப்படுத்த இபிஎஸ் அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
மேலும் புதியவர்களுக்கு பதவி கொடுக்கப்படும் என இபிஎஸ் தெரிவித்திருப்பதால், வருகின்ற இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்குவாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இடைத்தேர்தலில் அதிமுக வெல்வது கடினம் எனக் கூறப்பட்டாலும், தொண்டர்களின் பலத்துடன் களமிறங்க அதிமுக தலைமை முடிவு செய்துள்ளது.
தேர்தலுக்குப் பிறகு அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்த நிலையில், பல்வேறு சமாதான பேச்சுகளுக்கு பிறகு மீண்டும் ஒன்றிணைந்தது. இருப்பினும் தற்போது வரை எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணி, அதிமுக தலைமைக்கு எதிரான கருத்துகளையே முன்வைக்கின்றனர். மேலும் வேலுமணியும் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு, மாற்றுக் கட்சியில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளவந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் மேலும் சில எம்எல்ஏ-க்கள் ராஜினாமா செய்ய வாய்ப்பு இருப்பதால் தான், தமிழ்நாட்டில் இன்னும் இடைத்தேர்தலுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படாமல் இருக்கிறது.