இந்தியாவில் அனைத்து துறை ஊழியர்களூக்கும் பொருந்தும் விதமாக புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வர மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. நாளைய தேவைக்கு இன்றைய சேமிப்பு தான் அடித்தளமாக இருக்கும். அதற்கேற்ப அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் சார்பில் பல்வேறு சேமிப்பு மற்றும் முதலீட்டுத் திட்டங்கள் அமலில் உள்ளன.
பொதுமக்களும் முதலீட்டில் அதிக ஆர்வம் காட்டி வரும் நிலையில் அஞ்சல், எல்ஐசி மற்றும் வங்கி முதலீடுகள் வரவேற்பைப் பெற்றுள்ளன. முன்பெல்லாம் அஞ்சல் அலுவலகத்தில் சிறுசேமிப்புத் திட்டங்கள் மட்டுமே இருந்தன. ஆனால் இப்போது காப்பீட்டு திட்டம் முதல் பிக்சட் டெபாசிட் வரை பல சேமிப்புத் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.
அதிலும் குறிப்பாக அரசு ஊழியர்களுக்கென பிரத்யேகமாக அறிமுகப்படுத்தப்பட்ட Postal Life Insurance திட்டத்தில், தற்போது தனியார் துறை ஊழியர்களும் முதலீடு செய்ய முடியும். இந்நிலையில் அரசு, தனியார் மற்றும் அமைப்பு சாரா ஊழியர்களும் பயன்பெறும் வகையில் புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வரவுள்ளது மத்திய அரசு.
புதிய ஓய்வூதியத் திட்டமானது, வருங்கால தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனத்தின் (EPFO) மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. ஏற்கனவே அரசு மற்றும் தனியார் ஊழியர்களின் பிஎஃப் பணத்தை நிர்வகித்து வரும் EPFO, புதிய ஓய்வூதியத் திட்டத்தையும் நிர்வகிக்க உள்ளது.
பிஎஃப் திட்டத்தின் கீழ் ஊழியர்கள் தங்கள் பணத்தை எளிதாக எடுக்க, பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரபபட்டுள்ளன. பிஎஃப் கணக்கில் உள்ள ஓய்வூதியத் தொகையைத் தவிர்த்து, மீதமுள்ள பணத்தை முழுமையாக எடுத்துக் கொள்ள EPFO அனுமதிக்கிறது. ஏற்கனவே கோடிக்கணக்கான ஊழியர்களின் பிஎஃப் கணக்கை நிர்வகித்து வருவதால், புதிய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த EPFO நிறுவனம் தான் சரியான தேர்வு என மத்திய அரசு நம்புகிறது.
தற்போது வரை பரிசீலனையில் இருக்கும் இந்தப் புதிய திட்டம், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஓய்வூதியத் திட்டம் இந்தியாவில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள EPF, EPS மற்றும் NPS உள்ளிட்ட திட்டங்களுடன் இணைந்து செயல்படுமா அல்லது தனித்து செயல்படுமா என்பது குறித்த தகவல்கள் இனிதான் வெளிவரும்.
புதிய ஓய்வூதிய திட்டத்தின் சிறப்பம்சங்கள்:
* பரிசீலனையில் இருக்கும் புதிய ஓயவூதியத் திட்டத்தில் அரசு, தனியார் மற்றும் சாரா நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் என யார் வேண்டுமானாலும் கணக்கைத் தொடங்கலாம்.
* ஒவ்வொரு ஊழியருக்கும் பிரத்தியேகமாக தனி கணக்கு எண் வழங்கப்படும். ஊழியர்கள் வேலையை மாற்றினாலும், இந்தக் கணக்கு தொடர்ந்து செயல்படும் வகையில் அமைக்கப்படும்.
* மற்ற ஓய்வூதியத் திட்டங்களைப் போல மாதாந்திர அல்லது வருடாந்திர கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. ஊழியர்கள் தங்களின் வருமானத்திற்கு ஏற்ப, எப்போது வேண்டுமானாலும் பணத்தை செலுத்தலாம்.
* ஒரு சில ஓய்வூதியத் திட்டங்களில் தொடர் பங்களிப்பு இல்லை என்றால், அந்தக் கணக்கை ரத்து செய்து விடுவார்கள். ஆனால் புதிய ஓய்வூதிய திட்டத்தில் நீங்கள் நீண்ட காலமாக பங்களிப்பு அளிக்கவில்லை என்றாலும், உங்கள் கணக்கு தொடர்ந்து செயல்பாட்டிலேயே இருக்கும்.
* ஊழியர்கள் 60 வயதைக் கடந்த பிறகு ஓய்வூதிய பலனை அனுபவிக்கும் வகையில் திட்டம் வடிவமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.