

தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக 47 இடங்களில் வெற்றி பெற்று மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது.தேர்தல் தோல்விக்கு பின் இபிஎஸ்க்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம், வேலுமணி ஆகியோர் எம்எல்ஏக்களை ஒன்றாக திரட்டி தனி ஆலோசனை நடத்தினர்.
இதுவரை இபிஎஸ் தலைமையிலான அதிமுக 11 தேர்தல்களில் தோல்வியை சந்தித்துள்ளது.இதனால் பெரும்பாலான அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம். எல்.ஏ. க்கள் எடப்பாடி மீது அதிருப்தியில் இருக்கின்றனர்.
இந்நிலையில் அனைத்துக் கட்சிகளும் தங்கள் சட்டமன்றக் குழுத் தலைவர்களை தேர்வு செய்துள்ள நிலையில், அதிமுகவில் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை.தற்காலிக சபாநாயகர் கருப்பையாவை சந்தித்து அதிமுக எம்.எல்.ஏக்கள் 17 பேர் அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ்க்கு ஆதரவாக கடிதம் வழங்கியுள்ளனர்.
அதிமுக சட்டமன்றக்குழு தலைவராக எடப்பாடி பழனிசாமி இருப்பார் என 47 எம்எல்ஏக்களில் வெறும் 17 பேர் மட்டுமே கடிதம் வழங்கியுள்ளனர்.அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தளவாய் சுந்தரம், ஓ.எஸ். மணியன், கே.சி. கருப்பண்ணன், முக்கூர் சுப்ரமணியன், மரகதம் குமரவேல், ஜெயசுதா உள்ளிட்ட 17 பேர் மனு அளித்துள்ளனர். இதன் மூலம் அதிமுக இரண்டாக உடைகிறதா என்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன.
மேலும் பழனிச்சாமிக்கு எதிரான மனநிலையில் இருக்கக்கூடிய எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் ஆகியோர் தங்களின் ஆதரவு எம்எல்ஏக்களை திரட்டி தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு வழங்க முடிவெடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.அதிமுக இரு கோஷ்டியாக பிளந்திருப்பது இந்த செயல்பாடுகளால் தெரியவந்துள்ளது. இந்த காட்சிகளை நேரில் பார்த்த தொண்டர்கள், கட்சியின் எதிர்காலம் என்ன ஆகுமோ என்று கவலையில் ஆழ்ந்துள்ளனர்.