

மும்பை விமான நிலையத்தில் இன்று இரண்டு விமானங்கள் மோதிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தில் இருந்து மும்பைக்கு வந்த இண்டிகோ விமானம் (6E 791) தரையிறங்கிய பிறகு, டாக்ஸிவேயில் (Taxiway) சென்று கொண்டிருந்தது.
அப்போது, கோயம்புத்தூருக்குப் புறப்படுவதற்காக அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஏர் இந்தியா விமானத்தின் (AI 2732) இறக்கை முனையில், இண்டிகோ விமானத்தின் இறக்கை எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் இரண்டு விமானங்களின் இறக்கை முனைகளும் சேதமடைந்ததாக இரு நிறுவனங்களும் உறுதிப்படுத்தியுள்ளன.
இந்த மோதலின் போது விமானத்தில் இருந்த அனைத்துப் பயணிகளும் எவ்விதக் காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விபத்து நடந்தவுடன் பாதுகாப்பு நெறிமுறைகளின்படி பயணிகள் அனைவரும் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டனர். தற்போது இந்த இரண்டு விமானங்களும் தீவிரப் பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தொழில்நுட்பக் குறைபாடா அல்லது விமானியின் கவனக்குறைவா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.