

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருக்கும் நீதிமன்றங்களில் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவர் படங்களை தவிர, வேறு யார் படங்களையும் வைக்கக் கூடாது என அனைத்து நீதிமன்றங்களுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் சுற்றறிக்கை அனுப்பி இருந்தது. இதைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் நீதிமன்ற வளாகங்களில் ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் இன்று போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து, ‘அண்ணல் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படக்கூடாது’ என்ற தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டினை முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி சட்டத்துறை அமைச்சர் தலைமை நீதிபதியை சந்தித்துக் கூறினார்.
அதையடுத்து, “நீதிமன்றங்களில் அண்ணல் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படக்கூடாது என்ற தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு ஏற்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நீதிமன்றங்களில் அண்ணல் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படும் என்ற செய்தி பரவியதைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சய் விஜயகுமார் கங்காபூர்வாலாவைச் சந்தித்து இது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
தலைமை நீதிபதியிடம், ‘அண்ணல் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படக்கூடாது’ என்ற தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டினை சட்டத்துறை அமைச்சர் கடிதம் வழங்கி நேரில் தெரிவித்தார். தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டைக் கேட்டறிந்த தலைமை நீதிபதி, ‘நீதிமன்றங்களில் எந்தத் தலைவர்களின் புகைப்படத்தையும் அகற்ற உத்தரவிடப்படவில்லை. தற்போது உள்ள நடைமுறையே தொடரும் (Status Quo to be continued)’ எனத் தெரிவித்தார். இந்தத் தகவல் வழக்கறிஞர் மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது’ என தமிழ்நாடு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.