ரஷ்யா உக்ரைன் போரில் இதுவரை அமெரிக்கா உக்ரைனுக்கு ஆயுத உதவி செய்து வந்த நிலையில், தற்போது அந்த உதவியை திடீரென்று நிறுத்தியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
ரஷ்யா உக்ரைன் போர் பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. அவ்வப்போது போர் இடைவெளிவிட்டு மீண்டும் இரண்டு நாடுகளும் மோதிக்கொள்ளும் நிலைமை வரும். அந்தவகையில் கடந்த 2022ம் ஆண்டிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. ரஷ்யா பொருளாதாரத்தில் பெரிய நாடு என்பதால், உக்ரைனை பலம் வாய்ந்த அயுதங்களுடன் தாக்கி வருகிறது.
மேலும் உக்ரைனை சிறிது காலத்திலேயே தோற்கடித்துவிடலாம் என்று எண்ணிய ரஷ்யாவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது. பொருளாதார ரீதியாக ரஷ்யாவைவிட மிகவும் பின்தங்கி இருக்கும் உக்ரைன் இவ்வளவு நாட்கள் தாக்குப்பிடித்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. பல நாடுகள் உதவி செய்தும் வருகின்றன.
இப்படியான நிலையில், உக்ரைன் ஆதரவு நாடான அமெரிக்கா சில நாட்கள் முன்னர் ரஷ்யாவிடம் போர் நிறுத்தம் குறித்து பேசியிருக்கிறது. இதன் முதற்கட்டமாக அமெரிக்கா மற்றும் ரஷ்யா பிரதிநிதிகள் இடையே பேச்சுவார்த்தை என்பது நடந்தது. சில நாட்களுக்கு முன்பு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன், டொனால்ட் டிரம்ப் தொலைபேசியில் பேசியதை தொடர்ந்து பின் நேரடியாக பேச்சுவார்த்தை நடந்தது.
இதில் போர் நிறுத்த முயற்சிகளை எடுக்க ரஷ்யா மற்றும் அமேரிக்கா இருவரும் ஒப்புக்கொண்டனர்.
இதனையடுத்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் அமெரிக்க அதிபர் ட்ரம்பும் வெள்ளை மாளிகையில் சந்தித்து போர் நிறுத்தம் குறித்து பேசினர். அப்போது இரு நாட்டு அதிபருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மேலும் எந்த வித ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை.
இந்தநிலையில்தான் உக்ரைனுக்கு ஆயுத உதவி செய்துவந்த அமெரிக்கா, அதை நிறுத்திவிட்டது.
அமெரிக்கா சார்பில் சுமார் 71 சரக்கு கப்பல்களில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான பீரங்கிகள், ஏவுகணைகள் உக்ரைனுக்கு வழங்கப்பட்டன. தற்போதுவரை உக்ரைனுக்கு ஆயுதங்கள் அனுப்பப்பட்டு வந்தன. அமேரிக்கா ஆயுத உதவியை நிறுத்திய நிலையில், பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன.