

மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பான விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரை
"இருட்டில்தான் உண்மை இருக்கும்; இருட்டைப் பார்த்து அஞ்சக் கூடாது" என இந்திரா காந்தி கூறினார்.
2023-இல் வந்ததே மகளிர் மசோதா; தற்போதைய மசோதா மகளிருக்கானது அல்ல. இந்தியாவின் அரசியல் வரைபடத்தையே மாற்றும் முயற்சிதான் இது.பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலின மக்களின் அதிகாரத்தைப் பறிப்பதுதான் இந்த மசோதாவின் நோக்கம்.
ஜம்மு-காஷ்மீரைப் போல் அனைத்து மாநிலங்களையும் மாற்ற நினைக்கிறது பாஜக. ஒன்றிய அரசு அறிமுகம் செய்துள்ள தொகுதி மறுவரையறை மசோதா என்பது வெட்கப்பட வேண்டிய ஒன்று.முந்தைய சட்டப்படி மகளிர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தினால், நாங்கள் அனைவரும் ஆதரிக்கத் தயாராக உள்ளோம்.
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் உண்மையைச் சொன்னால் ஒன்றிய அரசுக்கு ஏன் கசக்கிறது? தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்கட்சிகள் தோற்கடிக்கும். அனைத்துப் பொதுத்துறைகளையும் தனியார்மயமாக்கிவிட்டு, இட ஒதுக்கீட்டைப் பறித்துவிட்டீர்கள்.
எந்த வகையான மகளிர் இட ஒதுக்கீடு, என்ன மசோதா என்பதை விளக்காமல் அதைக் கொண்டு வர முயற்சிக்கிறார்கள்.
தென் மாநிலங்கள் மற்றும் சிறிய மாநிலங்கள் ஒன்றிய அரசின் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்காது. தமிழ்நாட்டை அதிகாரமற்ற மாநிலமாக மாற்ற ஒன்றிய பாஜக அரசு முயற்சி செய்கிறது.தொகுதி மறுவரையறை விவகாரத்தில் இந்திரா காந்தி மற்றும் வாஜ்பாய் கொடுத்த உறுதிமொழிகள் செயல்படுத்தப்பட வேண்டும்.
மேஜிக் காண்பிப்பது போல், ஒன்றின் மீது ஒன்றை மறைத்து மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் தேச விரோத நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் எதிர்ப்போம்.பல மாநிலங்களின் அதிகாரத்தைப் பறிக்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக் கண்டிப்பாக அனுமதிக்க மாட்டோம். மசோதா நிறைவேறாது எனத் தெரிந்தும் கூட்டத்தைக் கூட்டியுள்ளனர்.
தற்போதைய மசோதாக்கள் மூலம் தன்னுடைய தேர்தல் ஆதாயங்களை நிறைவேற்றிக் கொள்ளப் பார்க்கிறது ஒன்றிய பாஜக.
மக்களவையில் மசோதா குறித்த எதிர்ப்பு வாதத்தின் நடுவில், பிரதமர் மோடியை மாயாஜாலக்காரர் என்று கூறிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிராகப் பாஜகவினர் அமளியில் ஈடுபட்டனர். பிரதமரை அவமதித்துவிட்டதாகக் கூறி, "மக்களவை விதிகளுக்கு உட்பட்டு ராகுல் காந்தி பேச வேண்டும்" என ராஜ்நாத் சிங் மற்றும் கிரண் ரிஜிஜு கண்டனம் தெரிவித்தனர். எதிர்க்கட்சியினரைப் பேச விடாமல் ஆளுங்கட்சியினர் அமளியில் ஈடுபட்டாலும், தொடர்ந்து தனது கருத்துகளை ராகுல் காந்தி எடுத்துக்கூறியது குறிப்பிடத்தக்கது.