

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி வசூலித்து மோசடி செய்ததாக புகார் எழுந்ததையடுத்து முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது ஊழல் தடுப்பு சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சராக அன்பில் மகேஷ் இருந்தபோது தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம், DTCP அனுமதி பெற்றுத்தருவதாக கூறி சுமார் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு செயலர் இளங்கோவன் சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்ததின் பேரில் பி.டி.அரசகுமார் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சட்டசபையில் அமைச்சர் மரிய வில்சனும், அன்பில் மகேஷ் மீது லஞ்சப் புகார் கூறியிருந்தார்.
இந்த புகார் தொடர்பாக இன்று காலை திருச்சி தென்னூர் அண்ணா நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். அன்பில் மகேஷின் திருச்சி வீடு மற்றும் அவர் தொடர்புடைய 6 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது ஊழல் வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்துள்ளனர்.
ஆதாரங்கள், ஆவணங்கள் அடிப்படையில் அன்பின் மகேஷ் மீது ஊழல் மற்றும் நம்பிக்கை மோசடி பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பாக இதுவரை 250க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய குற்ற பிரிவு போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதுவரை 177 தனியார் பள்ளிகளிடம் பல கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டு நம்பிக்கை மோசடி நடந்துள்ளது. மோசடி தொடர்பாக பி.டி.அரசகுமாரின் 20 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசகுமார் தொடர்புடைய இடங்களில் தனியார் பள்ளிகள் தொடர்பான பதிவுகள் சிக்கியதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
தலைமறைவாக உள்ள திமுக பிரமுகர் முத்துக்குமார் வீடுகள், பள்ளிகள் உள்ளிட்ட இடங்களிலும் சோதன நடைபெற்று வருகிறது.
தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கியதில் ரூ.100 கோடி முறைகேட்டில் கைதான அரசகுமாருடன் தொடர்பு என்ற புகாரில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் கடந்த மே மாதம் த.வெ.க ஆட்சி அமைந்ததில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.
முன்னதாக ஏ.வ.வேலு, கே.என்.நேரு ஆகியோர் வீடுகளில் ஏற்கனவே சோதனைகள் நடத்தப்பட்ட நிலையில், தற்போது முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொயயாமொழி வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருவதற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அன்பில் மகேஷ் வீட்டில் சோதனை, மற்றுமொறு திசைதிருப்பும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என திமுக முன்னாள் முதலமைச்சர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.
எதிர்கட்சிகள் மீது ரெய்டு நடத்துவதால் மக்கள் கோபத்தை தணிக்க முடியாது. மக்கள் பிரச்சனைகளை சரிசெய்ய முடியாத விரக்தியில் ரெய்டு அஸ்திரத்தை ஏவியுள்ளது தவெக அரசு என ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
பொய்யான குற்றச்சாட்டுகளும் சட்டத்தின் முன் நிலைக்காது என்பதை அரசு விரைவில் உணரும் என்றும் அவர் கூறியுள்ளார்
தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டு, மீனவர்கள் போராட்டம், ஆவின் பால் தட்டுப்பாடு கொலை குற்றங்கள் தவெக அரசு கண்டுகொள்ளவில்லை.
மாநிலம் உலுக்கி வரும் எதைவும் கண்டு கொள்ளாமல் லண்டனில் ஷுட்டிங் நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் என முக ஸ்டாலின் குற்றச்சாட்டு சாட்டியுள்ளார்.