

“தவெக” (தமிழக வெற்றிக் கழகம்) கட்சியின் 3-ஆவது ஆண்டு விழா நேற்று சென்னை அருகிலுள்ள பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் போது விஜய் மேடையில் நடனமாடியதும் மற்ற கட்சிகளை தாக்கி பேசியதும் வைரலாக ஊடகங்களில் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக பாஜக தலைமையிலான கூட்டணி என்றும் டப்பா என்ஜின் ஓட்ட என்ஜின் என விமர்சித்ததும் அனைவரையும் கவனிக்க வைத்தது.
இந்நிலையில் அவரது பேச்சுக்கு பதிலடி தரும் வகையில் முன்னாள் தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசினார்.
"மத்திய அரசை விமர்சிக்கும் விஜய் கட்சிக்கு முதலில் என்ஜினே இல்லை; அங்கே ஓட்டுவதற்கு யார் இருக்கிறார்? வெறும் விசில் மற்றும் கைத்தட்டலுக்காக மட்டுமே அவர் பேசுகிறார். மக்களைச் சிந்திக்க வைக்கும் அளவுக்கு அவரது பேச்சில் ஆழம் இல்லை.தமிழ்நாட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர். என்டிஏ கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் இபிஎஸ் தான்."
தொடர்ந்து பேசிய அண்ணாமலை, தனது தந்தை உடல்நிலை காரணமாகச் சட்டமன்றத் தேர்தல் தொகுதிப் பொறுப்பாளர் பணியிலிருந்து விலகுவதாக நயினார் நாகேந்திரனிடம் கூறிவிட்டதாகத் தெரிவித்தார். தேர்தல் நேரத்தில் பிரச்சாரம் மட்டும் செய்யப்போவதாக அவர் கூறியது பாஜக தொண்டர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் பணியாற்றத் தயாராக இருந்தும், அவருக்கு வெறும் 6 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டதால் ஏற்பட்ட அதிருப்தியே இந்த விலகலுக்குக் காரணம் என்றும் தகவல்கள் கசிகின்றன.
பாஜகவின் முக்கிய தேர்தல் பரப்புரை தலைவராக அண்ணாமலையை தேர்தல் களத்தில் சந்திக்க ஆவலுடன் இருந்தவர்களுக்கு அவரது இந்த அறிவிப்பு ஏமாற்றத்தை தரும் வண்ணம் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தமிழகம் முழுவதும் தேர்தல் பணியாற்ற தயாராக இருந்தும் பாஜக மாநில தலைவராக இருந்த அண்ணாமலைக்கு வெறும் ஆறு தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டதால் அதிருப்தி எனவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அறிஞர் அண்ணாவின் நினைவு நாளான இன்று அண்ணாவின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்திய பாஜகவின் கூட்டணி கட்சியான அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் விஜயின் பேச்சுக்கு அதிரடி பதில்களை அளித்துச் சென்றுள்ளார்.
"யார் யாரை விமர்சிப்பது என்கிற விவசாய இல்லாமல் பேசுகிறார் .விஜய் வாங்கும் சம்பளத்தில் கருப்பு எவ்வளவு வெள்ளை எவ்வளவு வருமான வரி எவ்வளவு என விஜய் கூற முடியுமா? கரூரில் 41 பேர் பலி குற்ற உணர்வே இல்லாமல் மேடையில் டான்ஸ் ஆடுகிறார். அவரது டான்ஸை பார்த்து கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பம் என்ன பாடுபடும்? பாவப்பட்ட மக்களை லாட்டரி மூலம் சுரண்டிய ஆதவ்அர்ஜுனா வீட்டில் விருந்து சாப்பிடுகிறார் விஜய். ஈவு இரக்கமே இல்லாத விஜய் ஒரு கட்சியின் தலைவராக இருக்க அருகதை அற்றவர். அதிமுக திமுக இடையே தான் போட்டி நானும் ரவுடிதான் என வடிவேலு பானையில் உள்ளே வருகிறார் விஜய்" என ஜெயக்குமார் தவெக கட்சியின் தலைவரான விஜய்க்கு பதிலடி தந்துள்ளார்.