

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று மாலை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ மிகச் சிறப்பாக நடைபெற்றது. விநாயகர் மற்றும் சண்டிகேஸ்வரர் தேர்களைத் தொடர்ந்து, முத்துக்குமாரசுவாமி - வள்ளி - தெய்வானை சமேதராகப் பெரிய தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். "அரோகரா" கோஷம் விண்ணைப் பிளக்க, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் பக்திப் பெருக்குடன் தேரை இழுத்துத் தரிசனம் செய்தனர்.
இந்த ஆன்மீக விழாவில் பங்கேற்க வந்த தமிழக பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, பழனியில் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார். பின்னர் படிப்பாதை வழியாக மலைக்கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்த அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழக மக்கள் நலமுடன் வாழவும், பா.ஜ.க. மூத்த தலைவர் எச். ராஜா அவர்கள் விரைவில் நலம் பெறவும் முருகப்பெருமானிடம் வேண்டிக் கொண்டதாக தெரிவித்தார். மேலும், மத்திய பட்ஜெட்டில் உள்கட்டமைப்பிற்காக ரூ.12 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், சென்னை-பெங்களூரு விரைவு ரயில் திட்டம் மற்றும் ஆதிச்சநல்லூர் கலாச்சார மையம் போன்றவை தமிழகத்தின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்றார்.
அரசியல் ரீதியான விமர்சனங்களை முன்வைத்த அண்ணாமலை, "முதலமைச்சர் ஸ்டாலினின் பட்ஜெட் குறித்த புகார்கள் அரசியல் காரணங்களுக்காகவே உள்ளன; இது இந்தியா முழுமைக்குமான சிறந்த பட்ஜெட்" என்று குறிப்பிட்டார். மேலும், தைப்பூசத்திற்கு வந்த பக்தர்களுக்குப் போதிய அடிப்படை வசதிகளைச் செய்ய அரசு தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டிய அவர், பழனியைத் தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி வரும் 10-ஆம் தேதி நடைபெறவுள்ள பிரம்மாண்ட ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க உள்ளதாகத் தெரிவித்தார். கரூர் கல்குவாரி விவகாரத்தில் நிருபர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுத்து, தான் 'அனைவருக்குமான முதலமைச்சர்' என்பதை ஸ்டாலின் நிரூபிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.