

பாஜகவின் என்டிஏ கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரிக்கும் வகையில் இன்று புதுச்சேரியில் பரப்புரை மற்றும் ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி நிகழ்ச்சியை முடித்துவிட்டு இரவு சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி நட்சத்திர விடுதியில் தங்குகிறார்.பிறகு ஏப்ரல் 4ம் தேதியான நாளை மதியம் பிரதமர் மோடி சென்னையில் இருந்து கேரளா செல்ல உள்ளார். இதற்கிடையே தான் சென்னையில் இருக்கும் பிரதமர் மோடி மயிலாப்பூர் தொகுதியில் பிரசாரம் மற்றும் ரோடுஷோ நடத்த திட்டமிட்டு இருந்தார். ஆனால் தற்போது வரை வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. இதனால் பிரதமர் மோடி ரோடுஷோ, பிரசாரம் உள்ளிட்டவற்றை அதிரடியாக ரத்து செய்துள்ளார்.
தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து விட்ட நிலையில் இன்னும் பாஜக தனது வேட்பாளர்களை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாஜகவின் தமிழ்நாட்டின் முக்கிய தலைவராக அறியப்படும் அண்ணாமலை தான் கேட்ட தொகுதியை தரவில்லை என்பதில் அதிருப்தியுடன் உள்ளதும் காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது .அதிருப்தி இருந்தாலும் பாஜகவின் வெற்றிக்காக அண்ணாமலை தொடர்ந்து பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில்தான் வேட்பாளர்களை தேர்வு செய்வது தொடர்பாக அதிருப்தியுடன் இருக்கும் அண்ணாமலைக்கு பிரதமரை சந்திக்க பாஜக மேலிடத்திலிருந்து அழைப்பு வந்துள்ளது. தொடர்ந்து தற்போது கேரளா மாநிலத்தில் தேர்தல் பரப்புரையில் அண்ணாமலை ஈடுபட்டு வரும் நிலையில் பிரதமர் ஆலோசனை கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என தேசிய தலைமை அழைப்பு விடுத்துள்ளதால் இன்று இரவே கேரளாவிலிருந்து சென்னை திரும்புவதாக கூறப்படுகிறது.
நாளை நடைபெறும் மோடியுடனான சந்திப்பில் வேட்பாளர்கள் தேர்வு செய்து தொடர்பாக அண்ணாமலையின் கருத்துகளுக்கும் முன்னுரிமை தரப்படும் என அண்ணாமலையின் ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த நிலையில் பியூஷ் கோயல் வருகை தர இருப்பதாகவும் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிருப்தி காரணமாக அண்ணாமலை நிச்சயமாக இந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என தலைமையிடம் தெரிவித்திருக்கும் நிலையில் அந்த முடிவில் மாற்றம் வருமா எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.