

தமிழகம் முழுவதும் உள்ள 44 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் (RTO) லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வாகனப் பதிவு, ஓட்டுநர் உரிமம் மற்றும் பல்வேறு சான்றிதழ்களுக்கு லஞ்சம் பெறப்படுவதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னை, தாம்பரம், கோவை, திருச்சி, அரியலூர், கும்பகோணம், காரைக்குடி, பழனி, ஆலங்குடி, கள்ளக்குறிச்சி, தென்காசி உள்ளிட்ட 44 இடங்களில் ஒரே நேரத்தில் அதிகாரிகளால் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதிகாரிகள் ஆவணங்களை தீவிரமாக ஆய்வு செய்து வருகின்ற நிலையில் சோதனையை அறிந்த இடைத்தரகர்கள் பலர் தண்டனைக்கு பயந்து அலுவலகத்தை விட்டு அலறியடித்து வெறியேறிவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த சோதனையில் கணக்கில் வராத பணம் மற்றும் முறைகேடான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிய அரசு பொறுப்பேற்று ஊழலை ஒழிக்கும் நடவடிக்கையாக நடத்தப்படும் இது போன்ற அதிரடி சோதனைகள் மூலம் விரைவில் லஞ்சம் ஒழிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் 44 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் இந்த அதிரடி ரெய்டு நடத்தப்பட்டுள்ளது.
கோவை, தென்காசி, நாகர்கோவில், திருநெல்வேலி, புதுக்கோட்டை, திருப்பூர் தெற்கு,, கள்ளக்குறிச்சி, கரூர், கும்பகோணம், திருச்சி, செஞ்சி, சேலம் கந்தம்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், காரைக்குடி, மதுரை மாவட்டம் வாடிப்பட்டி உள்ளிட்ட வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.
நாம் வாங்கும் வாகனங்கள் சம்பந்தமாக கட்டாயம் ஒரு முறையாவது அனைவரும் ஆர்.டி.ஓ ஆபிஸ் எனப்படும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு செனாறிருப்போம். இது இந்திய அரசின் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு முக்கிய நிர்வாக அமைப்பாகும். பொதுவாக RTO ஓட்டுநர் உரிமங்கள்,சாலை நிதி உரிமங்கள் மற்றும் சாலை வரி ஆகியவற்றுடன் தொடர்புடையது எனினும் வாகனங்களுக்கான கலால் வரி வசூலை ஒழுங்கமைத்தல் மற்றும் தனிப்பயன் பதிவுகளை விற்பனை செய்தல் என்றும் அறியப்படுகிறது.
புதிய வாகனங்கள் வாங்கியதும் அதற்கான வாகனப் பதிவு , புதிய மற்றும் பழைய வாகனங்களின் பதிவுகளை மேற்கொள்வது மற்றும் புதுப்பிப்பது. ஓட்டுநர் உரிமம் , கற்றல் உரிமம் , நிரந்தர ஓட்டுநர் உரிமம் மற்றும் சர்வதேச ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை வழங்குவது சாலை வரி மற்றும் வாகனங்களுக்கான பிற கட்டணங்களை வசூலிப்பது, வாகனத்தின் தகுதிச் சான்றிதழ் மற்றும் என்ஓசி (NOC - No Objection Certificate) வழங்குவது ஆகியவை இந்த அலுவலகத்தின் முக்கிய பணிகள்.
மேலும் அனைத்து பதிவு செய்யப்பட்ட புதிய வாகனங்களின் பதிவேட்டையும் பராமரிக்கிறது. ஒரு வாகன ஓட்டுநர் அல்லது உரிமையாளரின் உரிமத்தை வழங்குகிறது. சாலையில் ஓட்ட வாகனம் தகுதியானதா என்பதை உறுதிப்படுத்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் ஆவணங்களை வழங்குகிறது.
அத்துடன் வாகன உரிமையாளர்களிடமிருந்து வாழ்நாளில் ஒருமுறை செலுத்த வேண்டிய சாலை வரியை வசூலிக்கிறது. தனியார்
கார்கள், லாரிகள், டாக்சிகள் போன்றவற்றுக்கு வழங்கப்படும் உரிமங்களை நிர்வகிக்கவும்.வாகனங்கள் தொடர்பாக அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட புதிய விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் நடைமுறைப்படுத்துகிறது.வாகனங்களின் புகை வெளியேற்ற அளவுகளைச் சரிபார்த்து, மாசு ஆவணங்களை வழங்குதல் ஆகியவை இந்த அலுவலகம் கீழ் வருகிறது.
போக்குவரத்து விதிகளின் மீது விழிப்புணர்வு ஏற்படுத்தி சாலை பாதுகாப்பு மற்றும் வாகன மாசு கட்டுப்பாட்டு சோதனைகளை உறுதி செய்வது மற்றும் நமது வாகனத்தை காப்பீடு (Insurance) செய்யும்போது, ஆர்.டி.ஓ பதிவு விவரங்கள் மிகவும் அவசியமானவை. மேலும், போக்குவரத்து தொடர்பான விபத்துகள் மற்றும் வழக்குகளில் ஆர்.டி.ஓ அதிகாரிகள் முக்கிய விசாரணைப் பணிகளையும் மேற்கொள்கின்றனர்.
உதாரணமாக ஒரு காரை வாங்கும்போது,அந்த வாகனத்தைப் பதிவுசெய்து, அதற்கு ஒரு தனித்துவமான பதிவு எண்ணை வழங்குகிறது. நாம் காருக்கான காப்புரிமை கோரும் போது காப்பீட்டு நிறுவனங்கள் கார் காப்பீட்டுத் திட்டங்களை வழங்குவதற்கு முன்பு, வாகன விவரங்களைச் சரிபார்க்க RTO பதிவுகளைப் பயன்படுத்துகின்றன.
காப்பீட்டுத் திட்டம் பெறும்போது அவசியமான பதிவுச் சான்றிதழை (RC) வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் (RTO) வழங்குகிறது.பயன்படுத்தப்பட்ட காரை விற்றாலோ அல்லது வாங்கினாலோ, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் (RTO) உரிமைப் பரிமாற்றத்திற்கு உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. காப்பீடு செய்யப்படாத வாகனத்தை ஓட்டுவதால் பெரும் அபராதங்களும் சட்டரீதியான விளைவுகளும் ஏற்படலாம் என்பதால் ஆர்டிஓ மூலம் தேவையான அனைத்து ஆவணங்களையும் பெறுவது வாகன உரிமையாளர்களின் அவசியத் தேவையாகிறது .
குறிப்பாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் ஓட்டுநர் உரிமங்களை வழங்கிப் புதுப்பிப்பதன் மூலம், பயிற்சி பெற்ற ஓட்டுநர்கள் மட்டுமே வாகனங்களை இயக்குவதை உறுதி செய்கிறது. விபத்து ஏற்பட்டால் காப்பீடு கோருவதற்கு செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் கட்டாயமாகும் என்பதால் இது கடுமையான விதியாக உள்ளது.
இப்படி ஒரு வாகனம் பதிவு அதை ஓட்டத் தேவையான லைசென்ஸ் காப்புரிமை முதல் சாலை வரி வரை அனைத்து போக்குவரத்து சேவைகளையும் மக்களுக்கு வழங்கும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் இந்தப் பணிகளுக்கு நிர்ணயிக்கும் கட்டணத்தை விட அதிக அளவில் வசூலிப்பது குறித்து நிறைய புகார்கள் வந்த நிலையில் இந்த அதிரடி சோதனையை மக்கள் வரவேற்றுள்ளனர்.