

உலகில் வேற்று கிரகவாசிகள் இருக்கிறார்களா என்பது இன்றும் பலருக்கும் புரியாத புதிராகவே உள்ளது. இருப்பினும் சில திரைப்படங்களில் வேற்று கிரகவாசிகள் இருப்பது போன்ற காட்சிகள் நம்மை பிரமிக்க வைக்கின்றன. ஒருவேளை வேற்று கிரகவாசிகள் எனும் ஏலியன்கள் உண்மையில் இருந்தால் எப்படி இருக்கும் என்பது பலருக்கும் விடை தெரியாத கேள்வியாகவே இருக்கிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உலகில் ஏலியன்கள் இருப்பது உண்மைதான் என முன்னாள் அமெரிக்க பிரதமரான பராக் ஒபாமா தெரிவித்திருந்தார். இது உலக அளவில் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், தற்போது டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கை மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
அதாவது ஏலியன் தொடர்பான ரகசிய தகவல்கள் மற்றும் அரிய வான்வெளி நிகழ்வுகளை பொதுவெளியில் வெளியிடப் போவதாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்
கடந்த இரு தினங்களுக்கு முன்பு முன்னாள் அமெரிக்க அதிபரான பராக் ஒபாமா, ஏலியன்கள் பற்றிய சுவாரசியமான கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார்.
அவர் கூறுகையில், “பரந்து விரிந்து கிடக்கும் இந்த பிரபஞ்சத்தில் மனிதர்கள் மட்டுமின்றி, வேறு சில உயிரினங்களும் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. குறிப்பாக ஏலியன்கள் இந்த உலகில் இருக்கின்றன; ஆனால் நான் அவற்றை பார்த்ததில்லை. அமெரிக்காவில் உள்ள நெவாடா பாலைவனத்தில் ‘ஏரியா 51’ என்ற ரகசிய ராணுவ தளத்தில் ஏலியன்கள் பற்றிய ரகசிய தகவல்கள் இருப்பது உண்மை அல்ல. அமெரிக்க அதிபருக்கே தெரியாமல் மிகப்பெரிய சதி ஒன்று நடந்தால் மட்டுமே, அங்கு ரகசிய தகவல்கள் இருக்க வாய்ப்புண்டு” என ஒபாமா தெரிவித்தார்.
இந்நிலையில் ஏலியன்கள் தொடர்பான ரகசிய தகவல்களை விரைவில் பொதுவெளியில் வெளியிட இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். டிரம்பின் இந்த அறிவிப்பு தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில், “ஏலியன்கள் குறித்த ரகசிய தகவல்கள் மற்றும் அடையாளம் காணப்படாத அரிய வானியல் நிகழ்வுகள் தற்போது ரகசிய பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன. இந்தத் தகவல்கள் வெகு விரைவில் ரகசிய பட்டியலில் இருந்து நீக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். ஏலியன்கள் குறித்த தகவல்கள் விரைவில் பொதுவெளியில் வெளிச்சத்திற்கு வரும். இதற்கான பணிகளில் தற்போது அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்” என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஏலியன்கள் குறித்த தகவல்களை வெளியிடுவதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தற்போது தீவிரமாக இருக்கிறார். இந்நிலையில் இது உண்மைதானா அல்லது அமெரிக்கா வெளியிடப் போகும் ஏலியன்கள் பட்டியலில் என்ன இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள உலக நாடுகள் ஆவலுடன் காத்திருக்கின்றன.
ஏலியன்கள் இருப்பது உண்மையென்றால், அது குறித்த தகவல்கள் அமெரிக்காவிற்கு மட்டும் எப்படி கிடைத்திருக்கும் என்ற கேள்வியும் எழுகிறது. இருப்பினும் அமெரிக்கா ரகசிய தகவல்களை வெளியிடும் போது தான், பல கேள்விகளுக்கான முடிச்சுகள் அவிழும்