

தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (TAHDCO), இளைஞர்கள் வேலைவாய்ப்பிலும், சுயதொழிலிலும் சிறந்து விளங்க பல்வேறு திறன் பயிற்சிகளை அளித்து வருகிறது. அவ்வகையில் சோலார் பேனல்களை அமைப்பதற்கான தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சியையும் தாட்கோ வழங்கி வருகிறது.
இந்நிலையில் தாட்கோ மேலாண்மை இயக்குநர் கந்தசாமி, சோலார் பேனல் பயிற்சிக்கு தகுதி வாய்ந்த இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலாக இருக்கும் சூரிய மின் சக்தியை கடந்த சில ஆண்டுகளாக உலக நாடுகள் பயன்படுத்தி வருகின்றன.
சோலார் பேனல்களுக்கு இனி வரும் காலங்களில் நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில், இதனை முறையாக அமைப்பதற்கான தொழில்நுட்ப வல்லுநர்கள் குறைவாகவே உள்ளனர். இந்நிலையில் சோலார் பேனல் தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சியை இளைஞர்கள் கற்றுக் கொண்டால், தொடக்கத்திலேயே ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை சம்பளம் கிடைக்கும்.
அதோடு இதில் சுயதொழில் செய்யும் வாய்ப்புகளும் உள்ளன. அரசு சார்பில் வழங்கப்படும் இந்த அரிய பயிற்சியை இளைஞர்கள் தவறவிட வேண்டாம் என தாட்கோ மேலாண்மை இயக்குனர் கந்தசாமி அறிவுறுத்தியுள்ளார்.
உலக அளவில் சோலார் பேனல் மின் உற்பத்தி மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் சோலார் பேனல்களை அதிகளவில் உருவாக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அரசு சார்பில் சோலார் பேனல் தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சியும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தாட்கோ, டாக்டர் ரெட்டி நிறுவனத்துடன் இணைந்து ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு சோலார் பேனல் பொருத்தும் தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சியை இலவசமாக அளிக்கிறது.
பயிற்சி காலம்:
* சோலார் பேனல் தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சி சென்னையில் 45 நாட்களுக்கு அளிக்கப்படும்.
* வெளி மாவட்ட இளைஞர்கள் சென்னையில் தங்கி பயிற்சியைப் பெறும் வகையில், டாக்டர் ரெட்டி நிறுவனம் உணவு மற்றும் விடுதி வசதிகளை இலவசமாக வழங்குகிறது.
தகுதிகள்:
* தாட்கோ வழங்கும் பயிற்சியில் இணைய விண்ணப்பதாரர் 18 வயது முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
* ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் மட்டுமே இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க முடியும்.
* குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
* பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை சோலார் பேனல் தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு + சுயதொழில்:
* சோலார் பேனல் தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சியை முழுமையாக முடித்தால், தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தின் அங்கீகார சான்றிதழ் வழங்கப்படும்.
* பயிற்சியை முடித்த இளைஞர்களுக்கு ரூ.20,000 முதல் ரூ.30,000 வரையிலான வேலைவாய்ப்பை பெற்றுத் தரவும் வழிவகை செய்யப்படும்.
* இளைஞர்கள் சுயதொழில் தொடங்க விரும்பினால், அவர்களுக்கு தாட்கோ மூலம் மானியத்தில் கடன் உதவியும் செய்து தரப்படும்.
இந்தப் பயிற்சியைப் பெற விரும்பும் இளைஞர்கள் https://tahdco.com/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.