

தமிழ்நாடு சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் வழங்கினார். வரும் செப்டம்பர் வரை அவருக்கு பதவிக்காலம் இருக்கும் நிலையில் சபாநாயகரிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். 2018ஆம் ஆண்டு முதல் சட்டப்பேரவை செயலாளராக இருந்து வரும் இவரின் பணிக்காலம் ஏற்கனவே நிறைவு பெற்றிருந்தாலும் கூட, அவருக்கான பணி நீட்டிப்பு என்பது கடந்த அரசால் வழங்கப்பட்டு, வரும் செப்டம்பர் மாதம் வரை உள்ள நிலையில் அவர் தன்னுடைய சட்டப்பேரவை செயலாளர் பணியை ராஜினாமா செய்திருக்கிறார்.
இவர் கடந்த 15 ஆண்டுகளாக திமுக, அதிமுக ஆட்சிக்காலத்தில் சட்டப்பேரவை செயலாளராக பதவியில் தொடர்ந்த அவர் தவெக ஆட்சியிலும் நீடித்தார். 35 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டசபை அனுபவம் கொண்ட இவர் ராஜினாமா செய்திருப்பதற்கான காரணம் எதுவும் வெளியாகவில்லை. எனினும் அதிக அனுபவம் கொண்ட ஒருவர் ராஜினாமா செய்திருப்பது தவெக அரசுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டமன்ற நடவடிக்கைகளில் 30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவமுள்ள இவர் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் தமிழக சட்டமன்ற செயலாளராக பணியாற்றி வருகிறார். எடப்பாடி பழனிச்சாமி, மு.க. ஸ்டாலின் ஆகியோர் முதலமைச்சர்களாக இருந்தபோது சட்டசபை செயலாளராக பணியாற்றியுள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு சீனிவாசன் பணி ஓய்வு பெற்ற நிலையில், 3 ஆண்டு காலம் அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. வரும் செப்டம்பர் வரை அவருக்கு பதவிக்காலம் இருக்கும் நிலையில் திடீரென அதற்கு முன்னதாக பணியிலிருந்து விலகியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் தலைமையிலான அரசு பதவியேற்ற போது எம்எல்ஏக்கள் பதவியேற்பு, ஆட்சியின் மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு பக்கபலமாக இருந்தவர், சபாநாயகராக ஜேசிடி பிரபாகர் பதவியேற்ற நிலையில் சட்டசபை விதிகள் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கியவர் திடீரென ராஜிநாமா செய்திருப்பதற்கான அதிகாரப்பூர்வமான காரணங்கள் இன்னும் வெளியாகவில்லை. ஒருவேளை புதிய அரசிற்கும், சட்டசபை செயலாளர் சீனிவாசனுக்கும் இடையே மோதல் ஏதேனும் ஏற்பட்டிருக்குமோ?