

தமிழ்நாட்டின் முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று (ஜூன் 1) டெல்லிக்கு சென்றார். பாஜகவில் இருந்து விலகி, அண்ணாமலை தனிக்கட்சியைத் தொடங்க இருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் இன்று (ஜூன் 2) பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்துப் பேசியுள்ளார் அண்ணாமலை. அப்போது அவரிடம் 5 பக்க கடிதம் ஒன்றையும் வழங்கியிருக்கிறார். இந்தக் கடிதம் தான் தற்போது பாஜக-வில் புயலைக் கிளப்பியுள்ளது.
இந்தக் கடிதத்தில், தான் தமிழக பாஜக-வில் இருந்து ஒதுக்கப்பட்டதன் பின்னணி குறித்து தெரிவித்து இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
தனிக்கட்சி தொடங்க இருக்கும் முடிவை எடுத்துவிட்டு தான், அண்ணாமலை டெல்லி சென்றிருப்பதாக இன்று காலை பரபரப்பான தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து அண்ணாமலையை சமாதானப்படுத்தும் முயற்சியின் பாஜக மேலிடம் ஈடுபட போவதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் சற்று முன் தேசிய தலைவர் நிதின் நபினை அவர் சந்தித்து கடிதம் ஒன்றை வழங்கி இருக்கிறார். அணணாமலை அளித்த 5 பக்க கடிதத்தில், தமிழக பாஜக-வில் தான் ஒதுக்கப்பட்டதன் பின்னணி, சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் படுதோல்விக்கான காரணங்கள் மற்றும் தான் கட்சியில் இருந்து விலகுகிறேன் என்பதைக் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இப்போது வரை அண்ணாமலை பாஜகவில் எந்த ஒரு பொறுப்பையும் இல்லாத சூழலில், தொண்டனாகவே சுமூகமாக கட்சியில் இருந்து விலக அவர் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அடுத்ததாக அண்ணாமலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா-வை சந்திக்க இருக்கிறார்.
தமிழ்நாட்டில் பாஜக வளர்ச்சிக்கு அதிக பங்காற்றியவர் அண்ணாமலை. ஆகையால் அண்ணாமலையை கட்சியில் தக்க வைத்துக்கொள்ள பாஜக மேல் இடம் அவரை சமாதானம் செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அவ்வகையில் அண்ணாமலைக்கு திரும்பவும் பாஜக மாநில தலைவர் பொறுப்பை வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அதோடு மத்திய அமைச்சர் பதவியும் அண்ணாமலைக்கு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தேசிய தலைவர் நிதின் நபினிடம் அண்ணாமலை கடிதம் வழங்கியிருக்கும் சூழலில், அவர் கட்சியில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகினாரா அல்லது இல்லையா என்பது குறித்த தகவல்கள் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.