

வருகிற ஏப்ரல் 1, 2026 முதல் சில வங்கிகள் தங்களது ஏடிஎம் மற்றும் UPI பரிவர்த்தனைகளில் முக்கிய மாற்றங்களை செய்துள்ளன.
ஏப்ரல் 1, 2026 முதல் HDFC, PNB மற்றும் Bandhan Bank போன்ற வங்கிகளில் மாதத்திற்கு 5 இலவச ஏடிஎம்(ATM) பரிவர்த்தனைகளுக்கு மேல் பயன்படுத்தினால், ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கும் ₹23(மற்றும் ஜிஎஸ்டி வரிகள்) கட்டணமாக வசூலிக்கப்படும். இந்த புதிய விதிமுறை சொந்த வங்கி மற்றும் பிற வங்கி ஏடிஎம்கள், UPI வழி ரொக்கப் பணம் எடுத்தல் ஆகியவற்றிற்கும் பொருந்தும். இருப்பு சரிபார்ப்பு(Balance Enquiry) போன்ற நிதி அல்லாத பரிவர்த்தனைகளும் இந்த வரம்பில் அடங்கும்.
இதுவரை ஏடிஎம்களில் QR Code ஸ்கேன் செய்து யுபிஐ மூலம் பணம் எடுப்பது தனிப்பட்ட முறையில் கணக்கிடப்பட்டது. ஆனால் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் யுபிஐ மூலம் எடுக்கும் பணமும் மாதாந்திர இலவச ஏடிஎம் பரிமாற்ற கணக்கிலேயே சேர்க்கப்படும். இலவச பரிமாற்ற வரம்பு முடிந்த பிறகு ஒவ்வொரு கூடுதல் பண பரிமாற்றத்திற்கும் ரூ.23+GST வசூலிக்கப்படும்.
அதே போல்,இந்தியன் வங்கி தனது வாடிக்கையாளர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளது. அதன்படி மாதம் 5 முறை ஏடிஎம்மில் பண பரிவர்த்தனையை கட்டணம் இல்லாமல் மேற்கொள்ளலாம் என்றும், அதற்கு மேல் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.17 கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை அடுத்த மாதம் அதாவது ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
மற்ற வங்கி ஏடிஎம்களைப் பயன்படுத்தும் போது மெட்ரோ நகரங்களில் 3 முறையும், மெட்ரோ அல்லாத நகரங்களில் 5 முறையும் இலவசமாகப் பயன்படுத்தலாம். இந்த வரம்பிற்கு பிறகு கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படும். இந்த பண பரிவர்த்தனை வரம்பில் பணம் எடுப்பது மற்றும் இருப்பு சரிபார்ப்பு, மினி ஸ்டேட்மென்ட் போன்ற அனைத்து சேவைகளும் அடங்கும்.
கட்டணங்களைத் தவிர்க்க, இருப்பு சரிபார்ப்பு போன்ற சேவைகளுக்கு வங்கியின் மொபைல் ஆப் அல்லது நெட் பேங்கிங் வசதியைப் பயன்படுத்துவது நல்லது.
வங்கிகளால் எடுக்கப்பட்ட இந்த முடிவுகள், சாதாரண மக்களை பண பரிவர்த்தனைகளுக்கு பதிலாக டிஜிட்டல் பரிவர்த்தனைகளை நோக்கி மாறும்படி கட்டாயப்படுத்தியுள்ளன. இந்த புதிய மாற்றங்களை மனதில் கொண்டு தேவையற்ற ஏடிஎம் வருகைகளைக் குறைப்பதன் மூலம் இந்த கூடுதல் கட்டணங்களைத் தவிர்க்கலாம்.