

கோழிப்பண்ணை தொழிலில் இருந்து சர்வதேச மேடைக்கு செல்லும் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த விவசாயி, இங்கிலாந்தின் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இந்திய விவசாயிகளின் நவீன அணுகுமுறை மற்றும் புதுமையான தொழில்நுட்பங்கள் குறித்து உரையாற்ற உள்ளார்.
மகாராஷ்டிராவை சேர்ந்த ரவீந்திர மெட்கர்(Ravindra Metkar) என்ற விவசாயி, இங்கிலாந்தின் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரங்கில் உரையாற்ற சிறப்பு அழைப்பைப் பெற்றுள்ளார். கோழிப்பண்ணை மற்றும் விவசாயத் துறையில் உள்ள சவால்கள், புதுமையான தீர்வுகள் குறித்து அவர் அங்கு பேசவுள்ளார். இந்த நிகழ்வு இந்திய விவசாயிகளின் பன்முகத்தன்மையையும், உலக அரங்கில் அவர்களின் குரல் ஓங்குவதையும் காட்டுகிறது.
மராட்டிய மாநிலத்தின் அமராவதி மாவட்டத்திலுள்ள மசலா அஞ்சன்கான் பாரி கிராமத்தைச் சேர்ந்த 57 வயதான ரவீந்திர மாணிக்ராவ் மெட்கர் என்ற விவசாயி 1984 ஆம் ஆண்டில் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே தன்னுடைய வீட்டின் மொட்டை மாடியில் கோழி பண்ணையை வெறும் 100 கோழிகளுடன் தொடங்கினார். வணிகவியலில் முதுகலை பட்டப்படிப்பை(M.Com) முடித்தவுடன் வங்கியிலிருந்து 5 லட்சம் ரூபாய் கடன் பெற்று 4,000 கோழிகளுடன் ஒரு பண்ணையை தொடங்க, சில ஆண்டுகளிலேயே 10 ஏக்கர் பரப்பளவில் கோழிகளின் எண்ணிக்கை 20,000ஆக உயர்ந்து பண்ணை வளர்ந்தது. ஆனால் பறவைக் காய்ச்சல் ஏற்பட்டு அவரது தொழிலை முற்றிலுமாக முடக்கியது. 2008 ஆம் ஆண்டு மீண்டும் வங்கிக்கடன் பெற்று 20,000 கோழிகளுடன் களமிறங்கினார். ஒவ்வொரு ஆண்டும் பத்தாயிரம் கோழிகளை அதிகப்படுத்தி இன்று அவரிடம் 1.8 லட்சம் கோழிகள் உள்ளது. 50 ஏக்கர் பண்ணை, ஆண்டுக்கு 15 கோடி ரூபாய் வருமானம் என மிகப் பெரிய அளவில் தன்னுடைய பண்ணையை உருவாக்கியுள்ளார்.
ஒரு காலத்தில் கல்லூரிக்குச் செல்ல சைக்கிள் கூட இல்லாமல் வறுமையில் வாடிய இவர், விவசாயத்துடன் கோழிப்பண்ணை தொழிலைத் தொடங்கி அதில் மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளார். தற்பொழுது அவர் தனது பண்ணையை மேலும் விரிவாக்கம் செய்யாமல், விவசாய மாணவர்களுக்கும், மற்ற விவசாயிகளுக்கும் விவசாயம் சார்ந்த தொழில்களில் வழிகாட்டும் பணியை செய்து வருகிறார். இதற்கு முன்பே சிங்கப்பூர் பல்கலைக்கழகம், ஐ.ஐ.டி பிலாய் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் போன்ற பல உயரிய இடங்களிலும் இவர் உரையாற்றியுள்ளார். தற்பொழுது ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தனது வெற்றிப் பயணத்தை பற்றி பகிர்ந்து கொள்வதற்கு அழைக்கப்பட்டிருப்பது இந்திய விவசாயிகளுக்கே கிடைத்த பெருமையாகக் கருதப்படுகிறது.
ஒரு இந்திய விவசாயி உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனத்தில் உரையாற்றுவது சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது. சமீபத்தில் வேளாண் பொருளாதார நிபுணர்களின் 32 வது சர்வதேச மாநாடு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. அதில் 12 கோடி இந்திய விவசாயிகள் மற்றும் 3 கோடி பெண் விவசாயிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், இந்திய விவசாய பாரம்பரியத்தின் அறிவியல் பின்னணி குறித்து விவாதிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.