

தற்போதுள்ள காலகட்டத்தில் யாருமே செல்போன் இல்லாமல் இருக்கவே முடியாது என்ற நிலை மாறிவிட்டது. பல்லு முளைக்கும் குழந்தை முதல், பல்லு போன கிளவி வரை அனைவரது கைகளிலும் செல்போன் உள்ளது.உலகம் முழுவதுமே சமூக வலைத்தளங்களில் பயன்பாடு அதிகரித்து விட்ட நிலையில், அதிலும் குறிப்பாக சிறார்கள் தான் அதிகளவு செல்போன்களில் ஆன்லைனில் சாட் செய்வது, கேம் விளையாடுவது, ரீல்ஸ் பார்ப்பது என்று அதிகளவு பயன்படுத்தி வருவதாக ஆய்வுகள் கூறுகின்றனர். இந்த காலகட்டத்தில் அனைவருக்கும் செல்போன் என்பது தேவை தான்.ஆனால் அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பெற்றோர்களும், ஆசிரியர்களும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். போன் என்பது அவசர தேவைக்காக போன் செய்வதற்கும், பாடம் சம்பந்தமான சந்தேகங்களை நண்பர்களிடம் கேட்பதற்கும் என்று விழிப்புணர்வை சிறார்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.
அதிலும் சிறார்கள் அதிகளவும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதால் அவர்களுக்கு உளவியல் ரீதியாக பாதிப்புகள் ஏற்படுவதாக தொடர்ந்து கவலைகள் எழுப்பட்டு வந்த வண்ணம் இருக்கிறது.
உதாரணமாக அமெரிக்காவில் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தும் குழந்தைகளில் 40 சதவீதம் பேர் 8 முதல் 12 வயதிற்கு உட்பட்டவர்கள் என்கிறது ஆய்வு. அதிகளவும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் குழந்தைகள் குடும்பத்தோடு இணைந்து செயல்படாமலும், உளவியல் ரீதியான பாதிப்புக்கும் ஆளகின்றனர்.
இந்த பிரச்சனைகளில் இருந்து சிறார்களை பாதுகாக்கும் பொருட்டு ஆஸ்திரேலிய அரசு புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதாவது, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் ‘ஆன்லைன் பாதுகாப்பு திருத்த சட்டம்-2024’ என்ற சட்டத்தை கொண்டு வந்துள்ளார். அதன்படி, 16 வயதுக்கு உட்பட்ட சிறார்கள், வரும் டிசம்பர் 10-ம்தேதி முதல் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக் டாக் போன்ற சமூக ஊடகங்களில் கணக்கு தொடங்கவோ, பயன்படுத்தவோ முடியாது என ஆஸ்திரேலிய பிரதமர் அறிவித்துள்ளார்.
வரும் டிசம்பர் 10-ம்தேதி முதல் 16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் யாரும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த முடியாது என ஆஸ்திரேலிய பிரதமர் அறிவித்துள்ளார். குழந்தைகள் குழந்தைகளாகவே இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த சட்டம் கொண்டு வரப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். ஆன்லைன் பாதுகாப்பு சட்ட மசோதா என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட இந்த சட்டம் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக் டாக், யூடியூப் போன்ற முக்கியமான சமூக வலைத்தளங்களுக்கு பொருந்தும்.
அதனை தொடர்ந்து சமூக வலைத்தள செயலிகளை செயல்படுத்தக்கூடிய நிறுவனங்கள் தங்களது தளங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் 16 வயதிற்கு உட்பட்டவர்கள் இல்லை என்பதை உறுதிபடுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் இந்த உத்தரவு டெக் ஜாம்பவான்களை அதிர்ச்சியடைச் செய்துள்ளது.
16 வயதிற்கு உட்பட்ட தங்களது பயனர்களின் கணக்குகளை நீக்குமாறு TikTok, Meta, X நிறுவனங்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறும் பட்சத்தில் நிறுவனங்களுக்கு சுமார் ரூ.297 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ள. இந்த அழுத்தத்தின் விளைவாக Meta அரசாங்கத்தின் கால கெடுவிற்கு முன்பாகவே சிறார்களின் கணக்குகளை முடக்குவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் சுமார் 5 லட்சம் ஆஸ்திரேலிய டீன்ஏஜ் பயனாளிகள் ஒரே இரவில் சமூக வளைத்தளத்தில் விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே டென்மார்க், நார்வே உள்ளிட்ட நாடுகள் 15 வயதிற்கு உட்பட்டவர்கள் சமூக வலைத்தளத்தை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமூக ஊடகங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், குழந்தைகளின் மனம், உடல்நலம் பாதிக்கப்படுவதாக கவலை தெரிவித்த அந்தோணி அல்பனீஸ், இந்த தடை உத்தரவு குழந்தைகளின் பாதுகாப்பையும், மனநலனையும் உறுதி செய்வதற்கான ஒரு கவசமாக பார்க்கப்படுகிறது என்று கூறியுள்ளார். மேலும் இந்த சட்டத்தை பின்பற்றி, பிரான்ஸ், கிரீஸ், ருமேனியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளும் சமூக ஊடகங்களை சிறார்கள் பயன்படுத்த தடை விதிக்க முடிவு செய்துள்ளன.