

பாரத் எலக்ட்ரானிக்ஸ் இந்திய அரசின் ஒரு பொதுத்துறை நிறுவனமாகும்.இந்நிறுவனத்தில் 2026-ஆம் ஆண்டிற்காக 51 பயிற்சி பொறியாளர் மற்றும் பயிற்சி அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியுள்ளது.
முன் அனுபவம் எதுவும் இல்லாத புதிய பட்டதாரிகளும் இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பித்து,இந்தியா முழுவதும் பணி செய்யும் வாய்ப்பினை பெறலாம்.இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் கொத்துவாரா அல்லது இந்தியாவின் தேவைப்படும் பிற பகுதிகளில் பணியமர்த்தப்படுவார்கள்.
பணியிடங்களின் விவரம் :
இந்த வேலைவாய்ப்பில். மொத்தமுள்ள 51 இடங்களில், எலக்ட்ரானிக்ஸ் துறைக்கு 30 இடங்களும், மெக்கானிக்கல் துறைக்கு 17 இடங்களும், சிவில் துறைக்கு 2 இடங்களும், எலக்ட்ரிக்கல் மற்றும் நிதித்துறை சார்ந்த அதிகாரி பணிக்கு தலா ஒரு இடமும் காலியாக உள்ளன. இந்த ஒப்பந்தப் பணியானது மூன்று ஆண்டுகள் வரை நீடிக்கும்.
கல்வித் தகுதி மற்றும் அனுபவம் :
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் தொடர்புடைய பொறியியல் துறைகளில் நான்கு ஆண்டு கால முழுநேர பி.இ, பி.டெக் அல்லது பி.எஸ்சி இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். நிதித்துறை சார்ந்த அதிகாரி பணிக்கு எம்.பி.ஏ அல்லது எம்.காம் முடித்திருக்க வேண்டும். தகுதியுள்ள புதிய பட்டதாரிகள் (Freshers) தாராளமாக விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு மற்றும் சம்பளம் :
01.01.2026 தேதியின்படி விண்ணப்பதாரர்கள் 28 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரையிலும் வயது தளர்வு உண்டு.
தேர்வாகும் பணியாளர்களுக்கு மாத ஊதியம் முதல் ஆண்டில் ரூ. 30,000மும், இரண்டாம் ஆண்டில் ரூ. 35,000மும், மற்றும் மூன்றாம் ஆண்டில் ரூ. 40,000மும் வழங்கப்படும்.
தேர்வு முறை மற்றும் விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதற்கான எழுத்துத் தேர்வு 2026 ஜனவரி 25 அன்று நடைபெறும். தகுதியுள்ளவர்கள் 2026 ஜனவரி 1 முதல் ஜனவரி 15 வரை www.bel-india.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
பொதுப்பிரிவினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 177 செலுத்த வேண்டும், எஸ்சி/எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டணம் கிடையாது.புதிய பொறியாளர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுவது நல்லது.