

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தி வரும் நிலையில், டிஜிட்டல் மோசடிகளும் அதிகளவில் அரங்கேறுகின்றன. இதனை தடுக்க ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும், டிஜிட்டல் மோசடிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் யுபிஐ சேவையில் ஒரு புதிய மாற்றத்தை கொண்டுவர ஆர்பிஐ முடிவு செய்துள்ளது. இதன்படி இனி 10,000-க்கு மேல் பணம் அனுப்பினால், ஒரு மணி நேரத்திற்குப் பிறகே பயனருக்கு செல்லும் வகையில் புதிய விதியை கொண்டு வரவுள்ளது ஆர்பிஐ.
தற்போதைய சூழ்நிலையில் யுபிஐ மூலமாக பணம் அனுப்பினால், அடுத்த நொடியே பயனருக்கு பணம் சென்று விடுகிறது. ஒருவேளை நாம் தெரியாமல் மோசடிகாரர்களுக்கு பணம் அனுப்பி விட்டால், அதனைத் திரும்பப் பெறுவது கடினமாகிறது.
இதன் காரணமாக ரூ.10,000 அல்லது அதற்கும் மேற்பட்ட தொகையை அனுப்பினால், அடுத்த ஒரு மணி நேரத்திற்கு பிறகே பயனருக்கு செல்லும் வகையில் புதிய விதியை கொண்டுவர ஆர்பிஐ திட்டமிட்டுள்ளது.
இந்த விதி அமலுக்கு வந்து விட்டால், நீங்கள் அனுப்பிய தொகையைத் திரும்ப பெற நினைத்தால் அந்த ஒரு மணி நேரத்திற்குள் திரும்ப பெற்றுக் கொள்ள முடியும். இதன் மூலம் டிஜிட்டல் மோசடிகள் பெருமளவில் குறைக்கப்படும் என ஆர்பிஐ தெரிவிக்கிறது.