

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் அடுத்த இரண்டு வாரத்திற்கு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக நேற்று அமெரிக்கா தெரிவித்தது. இதற்கு சம்மதம் தெரிவித்த ஈரான் ஹார்மூஸ் ஜலசந்தியை திறக்கவும் ஒப்புக்கொண்டது.
தற்காலிக போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் சம்மதித்தாலும், லெபனான் மீது தாக்குதல் தொடரும் என அறிவித்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது. லெபனான் மீதான வான்வழித் தாங்குதலால் கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று காலை திறக்கப்பட்ட ஹார்மூஸ் ஜலசந்தி மாலையே மூடப்பட்டது. ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக நேற்று 2 கப்பல்கள் மட்டுமே கடந்து சென்றன
லெபனான் மற்றும் ஹிஸ்புல்லா மீதான தாக்குதலை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நிறுத்தினால் மட்டுமே, போர் நிறுத்தத்திற்கு ஈரான் உடன்படும் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் மீண்டும் போர் தொடங்கியதாகவே பார்க்கப்படுகிறது.
போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து நேற்று 20 சதவீதம் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்தது. தற்போது மீண்டும் ஹார்மூஸ் ஜலசந்தி மூடப்பட்டிருப்பதால், கச்சா எண்ணெய்யின் விலை உயர்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
மேலும் லெபனான் மற்றும் ஹிஸ்புல்லா மீது தாக்குதல் நடத்தினால், போர் நிறுத்தத்திற்கு அர்த்தமே இல்லை என ஈரான் தெரிவித்துள்ளது. ஆனால் போர் நிறுத்த நிபந்தனைகளில், லெபனான் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்ற நிபந்தனை இல்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.