

ஒருங்கிணைந்த 4 ஆண்டு B.Sc, B.Ed மற்றும் B.A, B.Ed படிப்புகள் 2026-27 கல்வியாண்டு முதல் நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கல்வியியல் கல்லூரிகள் இந்த 4 ஆண்டு ஒருங்கிணைந்த பட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை மேற்கொண்டால், எந்த விதத்திலும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் பொறுப்பேற்காது என அறிவித்துள்ளது.
ஆசிரியர் பணியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு மிக முக்கியமான எச்சரிக்கையாக இது பார்க்கப்படுகிறது. இந்தத் தடையை மீறி சேரும் மாணவர்களின் பட்டங்கள், செல்லாததாகக் கருதப்பட வாய்ப்புள்ளது.
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை (NEP 2020) மற்றும் தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தின் (NCTE) புதிய வழிகாட்டுதலின் படி, பழைய 4 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புகளுக்கு பதிலாக ITEP (Integrated Teacher Education Programme) எனப்படும் புதிய முறை தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தான் ஒருங்கிணைந்த 4 ஆண்டு B.Sc, B.Ed மற்றும் B.A, B.Ed படிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன.
மாணவர்கள் சேர விரும்பும் கல்லூரியில், எந்தெந்த படிப்புக்கு அரசு மற்றும் பல்கலைக்கழக அனுமதி உள்ளது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். இனிவரும் காலங்களில் 4 ஆண்டு ஆசிரியர் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், NCTE அங்கீகாரம் பெற்ற ITEP படிப்பில் சேருவதே பாதுகாப்பானது.
தற்போது 2-ஆம், 3-ஆம் அல்லது 4-ஆம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இந்த அறிவிப்பால் பாதிப்பு இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.