

வேளச்சேரி முதல் பரங்கிமலை வரையிலான ரயில் சேவை வருகின்ற மார்ச் 10ஆம் தேதி முதல் தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த ரயில் சேவை பணிகள், தற்போது முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கப்பட உள்ளது.
சென்னையில் பறக்கும் ரயில் சேவை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி வரை பயன்பாட்டில் உள்ளது. தொடக்க காலத்தில் பறக்கும் ரயில் சேவையைத் திட்டமிட்ட போது, 3 கட்டங்களாக பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. இதன்படி கடற்கரை முதல் மயிலாப்பூர் வரை முதல் கட்டப் பணிகளும், மயிலாப்பூர் முதல் வேளச்சேரி வரை இரண்டாம் கட்டப் பணிகளும், வேளச்சேரி முதல் பரங்கிமலை மூன்றாம் கட்டப் பணிகளும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் வருகின்ற மார்ச் 10 ஆம் தேதி முதல் வேளச்சேரி டூ பரங்கிமலை வரையிலான பறக்கும் ரயில் சேவை, மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
* கடந்த ஆண்டு 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வேளச்சேரி டூ பரங்கிமலை ரயில் சேவை தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்திருந்தது. இதன்படி தற்போது இதற்கான அறிவிப்பு வெளியாகி ரயில் பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக இருந்த வேளச்சேரி டூ பரங்கிமலை ரயில் சேவை இன்னும் 12 நாட்களில் தொடங்கவிருக்கும் சூழலில், பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணிகளால், சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு வரை இயக்கப்படும் மின்சார ரயில்களின் எண்ணிக்கை பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பயணிகள் பலரும் பெரும் சிரமத்தை சந்தித்து வரும் நிலையில், மார்ச் 10 முதல் வேளச்சேரி டூ பரங்கிமலை ரயில் சேவை பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்க உதவும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
* சென்னை கடற்கரை முதல் தாம்பரம், செங்கல்பட்டு வரையிலான ரயில் சேவையில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக, பேருந்து சேவையின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ரயில் டிக்கெட் அல்லது ரயில் பாஸ் வைத்திருந்தால் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை இலவசமாக பயணிக்கலாம் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
பயணிகளின் வசதிக்காக சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் வரை ஒவ்வொரு 7 நிமிடத்திற்கும் ஒரு பேருந்தை இயக்க போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது
* சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக மூன்று விரைவு ரயில்களின் நேரமும் மாற்றப்பட்டுள்ளது.
1. சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கு செல்லும் பொதிகை விரைவு ரயில், வருகின்ற மார்ச் 2-ம் தேதி முதல் 16ஆம் தேதி வரை தாம்பரத்திலிருந்து இரவு 8.05 மணிக்கு புறப்படும்.
2. நெல்லையிலிருந்து எழும்பூர் வரும் நெல்லை விரைவு ரயில், வருகின்ற மார்ச் 1-ம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.
3. எழும்பூரில் இருந்து திருச்சி வரை செல்லும் சோழன் விரைவு ரயில், வருகின்ற பிப்ரவரி 28ஆம் தேதி முதல் மார்ச் 15 ஆம் தேதி வரை காலை 8 மணிக்கு பதிலாக 10:15 மணிக்கு புறப்படும்.