

தொழில்நுட்ப வளர்ச்சி முன்னேற்றத்தைக் கண்டு வரும் இன்றைய சூழலில், அது தொடர்பான ஆபத்துகளும் மக்களைத் தொடர்நது துரத்திக் கொண்டே வருகிறது. குறிப்பாக சைபர் கிரைம் மோசடிகள் கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகளை சைபர் கிரைம் துறை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் தற்போது புதிய வகையில் சைபர் கிரைம் மோசடி நடப்பதாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போலியான மொபைல் செயலிகளை யாரும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா காலகட்டத்திற்கு பிறகு ஓடிடி தளங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தியேட்டர்களில் வெளியான படங்கள் ஒரு மாதத்திற்கு பிறகு ஓடிடியில் வெளியாவது வழக்கம். ஓடிடியில் படங்களை பார்ப்பதற்கு சந்தா செலுத்த வேண்டும். இந்நிலையில் ஓடிடி சந்தா மற்றும் இலவச திரைப்படங்களை வழங்குவதாக தற்போது புதிய சைபர் கிரைம் மோசடி நடந்து கொண்டிருக்கிறது.
பெரும்பாலான மக்கள் ஆண்ட்ராய்டு மொபைல் போன்களைப் பயன்படுத்தி வரும் சூழலில், புதுப்புது வழிகளில் சைபர் கிரைம் மோசடிகள் நடந்து வருகின்றன. குறிப்பாக லிங்க் அனுப்புதல், ஃபார்வேர்ட் மெசேஜ் மற்றும் ஓடிபி திருட்டு உள்ளிட்ட பல வழிகளில் சைபர் கிரைம் மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் தற்போது இலவச திரைப்படங்கள் மற்றும் ஓடிடி சந்தாவை வழங்குவதாக கூறி மோசடிகள் நடந்து வருகின்றன. இதன் காரணமாக அதிகாரபூர்வமற்ற போலியான செயலிகளை பொதுமக்கள் யாரும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என சைபர் கிரைம் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒருவேளை யாரேனும் தேவையில்லாத மற்றும் போலியான செயலிகளை பதிவிறக்கம் செய்திருந்தால், அதனை உடனடியாக நீக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் உங்கள் மொபைல் போனை அவ்வப்போது தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருங்கள்.
இதுகுறித்து சைபர் கிரைம் துறை வெளியிட்டுள்ள விழிப்புணர்வு அறிக்கையில், “டிஜிட்டல் யுகம் மேலோங்கி வரும் இன்றைய சூழலில், சைபர் கிரைம் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இருப்பினும் இதிலிருந்து பொதுமக்கள் தங்களைக் காத்துக் கொள்ள அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம்.
தெரியாத நபர்களிடமிருந்து வரும் அழைப்புகள் மற்றும் லிங்குகளை யாரும் தொட வேண்டாம். அதேநேரம் தற்போது இலவச திரைப்படங்கள் மற்றும் ஓடிடி சந்தாவை வழங்குவதாக சில செயலிகள் வலம் வருகின்றன. இந்த போலியான செயலிகளை யாரும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இலவசம் என்ற கண்ணோட்டத்தில் வரும் குறுந்தகவல்கள் மற்றும் செயலிகளுக்கான லிங்குகளை யாரும் தொட வேண்டாம். போலியான செயலிகளை மொபைல் ஃபோனில் பதிவிறக்குவதன் மூலம் உங்கள் மொபைல் போனில் உள்ள தகவல்கள் திருடப்படும்” என சைபர் கிரைம் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.