

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுவாரா என்பது குறித்து கமலாலயத்தில் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
பாஜகவின் 27 வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக சென்னை கமலாலயத்தில் பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடவில்லை என அண்ணாமலை எடுத்துள்ள முடிவு குறித்தும் ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசியலில் அதிரடியாக நுழைந்த அண்ணாமலை உறுப்பினராக சேர்ந்த சில மாதங்களிலேயே மாநிலத் தலைவராக பதவி உயர்ந்தார். அதன் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மீது காட்டமான விமர்சனங்கள் வைப்பதும், 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையில் தனி அணியாக போட்டியென அடுத்தடுத்து கட்சியில் தன்னுடைய இருப்பிடத்தை நிலை நாட்டி வந்தார். ஆனால் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக உடனான கூட்டணியை பெரிதும் விரும்பிய மோடி, அண்ணாமலையே ஓரங்கட்டி நயினார் நாகேந்திரனுக்கு முக்கியத்துவம் கொடுத்தாக தகவல் வெளியாகியது. அண்ணாமலைக்கு முக்கியத்துவம் குறைந்த நிலையில் 2026 தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சார களத்தில் அவருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்கான பொறுப்பில் இருந்தும் விலகிக் கொண்டார்.
மோடி-ஷா கூட்டணி அண்ணாமலையை ஓரங்கட்டியதால் மாநிலத் தலைவராக இருந்துவிட்டு சில தொகுதிகளுக்கு மட்டும் பொறுப்பாளராக இருப்பதில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அண்ணாமலை தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி கொள்கிறாரோ என்ற எண்ணம் எழுந்துள்ளது. சிங்காநல்லூர் அல்லது கவுண்டபாளையம் தொகுதிகளில் ஒன்றை அவர் பெரிதும் எதிர்பார்த்ததாகவும், இதற்காக சில களப் பணிகளும் முன்னெடுத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்ட 27 தொகுதிகளில் இந்த இரண்டு தொகுதிகளும் இடம்பெறவில்லை.
சென்னையில் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்ட தொகுதியான மயிலாப்பூரில் தமிழிசை சௌந்தரராஜனும், கோவையில் வானதி சீனிவாசனும் ஏற்கனவே பணிகளைத் தொடங்கி விட்டனர். அண்ணாமலைக்கு பல்லடம் தொகுதியை ஒதுக்க முன் வந்ததாகவும், ஆனால் 2024 மக்களவைத் தேர்தலில் இங்கு குறைந்த வாக்குகளே பெற்றதால் இதை தவிர்த்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று பாஜக மேலிடத்திற்கு கடிதம் எழுதி இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழக பாஜகவில் முக்கிய இளைஞர் சக்தியாக பார்க்கப்பட்ட அண்ணாமலை, சாதாரண தொண்டராகத் தொடர்ந்து கட்சி மற்றும் தேர்தல் வேலைகளை செய்ய தயார் என்று கூறியிருப்பது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.