ஓபிஎஸ்-ஐ பாஜக ஏமாற்றிவிட்டது ... இனிமேல் தான் ஆட்டம் ஆரம்பம் -  புகழேந்தி பரபர

ஓபிஎஸ்-ஐ பாஜக ஏமாற்றிவிட்டது ... இனிமேல் தான் ஆட்டம் ஆரம்பம் -  புகழேந்தி பரபர
Updated on

ஓ.பன்னீர்செல்வத்தை பா.ஜ.க. தலைவர்கள் முழுமையாக கை கழுவி விட்டார்கள் என்பது உண்மைதான் எனவும், இனிமேல்தான் ஓ.பன்னீர்செல்வத்தின் அடுத்தக்கட்ட ஆட்டம் தொடங்கும் எனவும் அவரது ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார். 

மூன்று முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் யாரும் வரவில்லை. குறைந்தபட்சம் ஒரு இரங்கல் செய்தியாவது வெளியிட்டிருக்கலாம். அதுவும் செய்யவில்லை. ஈபிஎஸ்ஸின் தற்போதைய நடவடிக்கை ஒரு நிரந்தர பிரிவை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் காலமானார். தாயாரின் மறைவையொட்டி ஓ.பன்னீர்செல்வத்திற்கு பல்வேறு தலைவர்களும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி மற்றும் புகழேந்தி ஆகியோர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டுக்கு சென்று தாயார் பழனியம்மாள் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி கூறியதாவது:

ஓபிஎஸ்ஸின் தாயார் மறைவையடுத்து முதல்வர் ஸ்டாலின் உடனடியாக இரங்கல் தெரிவித்ததோடு ஓபிஎஸ்ஸை போனில் தொடர்பு கொண்டும் ஆறுதல் தெரிவித்தார். திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் யாரும் வரவில்லை. இது அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் அறிக்கை கூட விடவில்லை. பேட்டியின்போது செய்தியாளர் கேட்ட பிறகே ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். இது ஓபிஎஸ் தரப்பை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. 

எதிர்கட்சியினர் கூட இரங்கல் தெரிவித்து நேரில் அஞ்சலி செலுத்தி சென்றனர். இவர்களின் தற்போதைய நடவடிக்கை ஒரு நிரந்தர பிரிவை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அ.தி.மு.க.வில் பிளவு என்பது உறுதியாகி விட்டது.  

கைகழுவிய பாஜக

ஓ.பன்னீர்செல்வத்தை பாஜக தலைவர்கள் முழுமையாக கை கழுவி விட்டார்கள். இனிமேல் அவர்களை நம்பி எந்த பயனும் இல்லை என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியிருப்பது முற்றிலும் உண்மை. பண்ருட்டி ராமச்சந்திரன் எது சொன்னாலும் 100% சரியாகத்தான் இருக்கும். ஒரு காலத்தில் ஸ்தாபன காங்கிரசின் நிலைப்பாடு குறித்து பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியபோது, முதலில் ஏற்றுக்கொள்ளாத எம்ஜிஆர் பின்னர் உணர்ந்து கொண்டார். பண்ருட்டியார் கூறியது போல தமிழ்நாடு அரசியலில் நிறைய மாற்றங்கள் விரைவில் ஏற்படப்போகிறது. ஓபிஎஸ்ஸின் அடுத்தகட்ட ஆட்டம் இனிமேல் தான் தொடங்கும்." எனத் தெரிவித்துள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com