2024 மக்களவைத் தேர்தல்: தெலங்கானாவில் 10 தொகுதிகளை வெல்ல பாஜக வியூகம்!

2024 மக்களவைத் தேர்தல்: தெலங்கானாவில் 10 தொகுதிகளை வெல்ல பாஜக வியூகம்!
https://tamil.oneindia.com

2024 மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தெலங்கானாவில் குறைந்தபட்சம் 10 தொகுதிகளை வெல்வதற்கான வாய்ப்புகளை மேம்படுத்தவும், வாக்கு சதவிகிதத்தை அதிகரிப்பதற்கும் பாஜக வியூகம் அமைத்து வருவதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

தெலங்கானாவில் மொத்தம் 17 மக்களவை தொகுதிகள் உள்ளன. 2019ம் ஆண்டு தேர்தலில் பாஜக நான்கு இடங்களை வென்றது. பாரத ராஷ்டிர சமிதி (முன்னர் தெலங்கானா ராஷ்டிர சமிதி) 9 இடங்களை வென்றிருந்தது. காங்கிரஸ் கட்சிக்கு 3 இடங்களும், அகில இந்திய மஜ்லிஸ்-இ-ட்டேஹாதுல் முஸ்லிமின் (ஏஐஎம்ஐஎம்) கட்சிக்கு ஒரு இடமும் கிடைத்தது.

இந்த நிலையில் வரும் தேர்தலுக்குத் தயாராகும் வகையில் இப்போது பூத் கமிட்டிகள் அமைப்பது, கிளஸ்டர் அடிப்படையில் தொண்டர்கள் மூலம் பிரசாரங்களை தொடங்கவும், தலைமையின் அணுகுமுறையின்படி செயல்படவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பாஜகவின் இரண்டு முக்கியமான குறிக்கோள்களில் ஒன்று வடதெலங்கானாவில் வாக்கு சதவிகிதத்தை அதிகரிப்பது, இரண்டாவது, சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடம் பெற்ற பேரவைத் தொகுதிகளில் தொண்டர்களை அதிக அளவில் ஈடுபடுத்தி பிரசாரம் செய்வது.

கடந்த 2018ம் ஆண்டு 6.10 சதவிகிதமாக இருந்த வாக்கு சதவிகிதம் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது 14.2 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. பிஆர்எஸ் எதிர்ப்பு அலை காரணமாக வாக்கு சதவிகிதம் சரிந்ததால் பாஜகவின் வாக்கு சதவிகிதம் அதிகரித்துள்ளது.

‘எங்களுக்கு பலவீனமாக உள்ள தொகுதிகளில் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளோம். மேலும், வாக்கு சதவிகிதத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்’ என்கிறார் கட்சியின் முன்னாள் தேசிய செயலாளரும், தற்போது மத்தியப் பிரதேச மாநில பொறுப்பாளருமான பி.முரளிதர ராவ். ‘முதலில் பாஜக மீதான தவறான எண்ணத்தை துடைத்தெறிந்து, எங்களின் செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு செல்ல  வேண்டும். இதைச் செய்தாலே வெற்றி நிச்சயம்’ என்கிறார் மக்களவைத் தேர்தலில் போட்டியிட ஆர்வமாக இருக்கும் மூத்த பாஜக தலைவர் ஒருவர்.

இதையும் படியுங்கள்:
பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிடத் தயாரா? மம்தாவுக்கு பாஜக தலைவர் சவால்!
2024 மக்களவைத் தேர்தல்: தெலங்கானாவில் 10 தொகுதிகளை வெல்ல பாஜக வியூகம்!

பிஆர்எஸ் கட்சியின் செல்வாக்கு சரிந்துவிட்ட நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில் போட்டி பாஜகவுக்கும் (தேசிய ஜனநாயக கூட்டணி) காங்கிரஸுக்கும்தான் (இந்தியா எதிர்க்கட்சி கூட்டணி) இருக்கும் என்கின்றனர் பாஜக தலைவர்கள்.

‘பாஜகவின் மத்திய தலைவர்கள் முக்கிய தொகுதிகளில் பிரசாரம் செய்ய உள்ளனர். அவர்கள் மத்திய அரசின் வளர்ச்சிப் பணிகளையும், திட்டங்களையும் மக்களிடம் எடுத்துக் கூறுவார்கள். வரும் மக்களவைத் தேர்தலில் 25 சதவிகித கூடுதல் வாக்குகள் பெறும் வகையில் தொண்டர்களை முடுக்கிவிட்டுள்ளோம்’ என்று கட்சியின் தேசிய செயலாளரும், தெலங்கானா மாநில பொறுப்பாளருமான தருண் சுக் தெரிவித்திருக்கிறார்.

‘சென்ற முறை போல் அல்லாமல், இந்த முறை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டு விடும். பத்து தொகுதிக்கான வேட்பாளர்கள் யார் என்பது ஏறக்குறைய இறுதி செய்யப்பட்டு விட்டது’ என்றார் மாநிலத் தலைவர் கிஷன் ரெட்டி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com