

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு, அதிரடி நடவடிக்கையாக 717 மதுக்கடைகளை மூட உத்தரவிட்டிருந்தார். வழிபாட்டுத் தலங்கள் பேருந்து நிலையங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு அருகே 500 மீட்டர் சுற்றளவில் உள்ள மதுக்கடைகள் அடுத்த இரண்டு வாரங்களில் மூடப்படும் என அந்த அறிவிப்பில் முதல்வர் விஜய் தெரிவித்திருந்தார்.
இருப்பினும் இதுவரை பல மதுக் கடைகள் மூடப்படாத நிலையில், அதுகுறித்த ஆலோசனையில் இன்று (ஜூன் 3) முதல்வர் விஜய் ஈடுபட்டார். அப்போது இதுவரை எத்தனை மதுக் கடைகள் மூடப்பட்டுள்ளன; மூடப்படாத கடைகள் எத்தனை என்பது குறித்த விவரங்களை முதல்வர் கேட்டறிந்தார்.
அதோடு மதுக் கடைகளில் ஒரு பாட்டிலுக்கு ரூ.10 அதிகம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகார் குறித்தும் கேட்டறிந்தார்.
தமிழ்நாட்டில் மது மற்றும் போதைப் பழக்கத்தை ஒழிக்க முதல்வர் விஜய் அதிரடியான பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதன்படி முதல் கட்டமாக 717 மதுக்கடைகளை மூட விஜய் உத்தரவிட்டிருந்தது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
மதுக் கடைகளை மூடினால் ஊழியர்கள் பாதிக்கப்படாமல் இருக்க, மாற்று ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்வதாக தெரிவித்திருந்தது. இருப்பினும் மூடப்படும் மதுக்கடைகளுக்கு பதிலாக புதிய மதுக் கடைகளைத் திறக்க வேண்டும் என டாஸ்மாக் ஊழியர்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று தலைமை செயலகத்தில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் முதல்வர் விஜய். இந்த ஆலோசனையில் மதுக் கடைகளை மூடுவது குறித்த அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் பாட்டிலுக்கு ரூ.10 அதிகமாக வாங்கப்படும் புகார்களை தீவிரமாக விசாரிக்கவும் முதல்வர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தமிழக முதல்வர் விஜய் 717 மதுக் கடைகளை மூட உத்தரவிட்ட அடுத்த சில தினங்களிலேயே, ஒரு சில மதுக் கடைகள் மூடப்பட்டன. இருப்பினும் தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் கல்வி நிலையங்களுக்கு அருகில் உள்ள டாஸ்மாக்கை மூட பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் முதல்வர் விஜய்யின் இந்த அவசர ஆலோசனையால், மதுக் கடைகள் விரைவில் மூடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் புதிய கடைகள் திறக்கப்படுவதையும், சந்துக் கடைகள் அதிகரிப்பையும் முதல்வர் விஜய் தடுப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.