

சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள மைதானத்தில் இன்று மதியம் 12 மணி முதல் 3 மணி வரை த.வெ.க. நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது. முதலில் மக்கள் சந்திப்பு பிரச்சாரமாக திட்டமிடப்பட்ட இந்தக் கூட்டம், காவல் துறையின் பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட்டு நிர்வாகிகள் கூட்டமாக மாறியது.
இந்தக் கூட்டத்தில் உரையாற்ற, சற்று முன் சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டிலிருந்து புறப்பட்டார் தலைவர் விஜய். இந்தக் கூட்டத்தில் பங்கேற்க 4,998 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்தக் திட்டத்தில் பங்கேற்க பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சேலத்தில் விஜய்யின் வருகையொட்டி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ள மைதானத்தில், தீவிர வெடிகுண்டு சோதனை நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் மக்கள் பிரச்சார கூட்டத்தில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு, தவெக நடத்தும் கூட்டத்திற்கு கடுமையான விதிமுறைகளை விதித்து வருகிறது காவல்துறை.
காவல்துறையின் 50-க்கும் மேற்பட்ட கடுமையான விதிகளுக்கு உட்பட்டு நிர்வாகிகள் கூட்டமாக இன்று நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் சேலத்தில் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. இந்தக் கூட்டத்தில் சேலம், ஈரோடு, நாமக்கல், தஞ்சாவூர் மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 4,998 நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்க உள்ளனர்.
கூட்டத்தில் பங்கேற்க வரும் நிர்வாகிகளிடம், க்யூஆர் கோடு உடன் கூடிய அடையாளச் சீட்டு இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர். தவெக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ள சீலநாயக்கன்பட்டி மைதானத்தில் மூன்று நுழைவாயில்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதில் இரண்டு நுழைவாயில்களில் நிர்வாகிகள் உள்ளே வருவார்கள். தவெக தலைவர் விஜய் உள்ளே வருவதற்கு சிறப்பாக தனி நுழைவாயில் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
சேலத்தில் இன்று நடைபெற இருக்கும் தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் என்ன பேசப்போகிறார் என்பது தான் இன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. சென்னையிலிருந்து சற்று முன் கிளம்பிய விஜய், தனி விமானத்தின் மூலம் சேலம் வந்தடைந்து, அங்கிருந்து சாலை மார்க்கமாக சீலநாயக்கன்பட்டியை அடையவுள்ளார்.
விஜயின் வருகையை ஒட்டி, வெடிகுண்டு தடுப்பு பிரிவு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக அளவில் இந்த கூட்டம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாத வகையில் பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவ்வகையில் தற்போது வெடிகுண்டு சோதனையும் நடைபெற்று வருகிறது.