

தமிழ்நாட்டில் நாளை சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளதால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை (EVM) வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பும் பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. EVM எந்திரங்களில் உள்ள பொத்தான்களில் வாசனை திரவியங்களை தடவி, வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை கண்டறியும் முயற்சிக்கு தேர்தல் ஆணையம் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
வாக்களிப்பது அவரவர் உரிமை என்பது போலவே, யாருக்கு வாக்களித்தோம் என்பதை வெளியில் சொல்லாமல் இருப்பதும் அவர்களின் உரிமை. ஆனால் EVM எந்திரங்களில் வாசனை திரவியங்களை தடவி வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை முறைகேடாக கண்டறிய சிலர் முயற்சி செய்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், “மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வாசனை திரவியங்களை தடவுவது குற்றச் செயலாகும். இது வாக்கு ரகசியத்தை பாதிக்கும். ஆகையால் அனைத்து EVM எந்திரங்களையும் தீவிரமாக பரிசோதிக்க தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒருவேளை பொத்தான்களின் மீது வாசனை திரவியம் தடவியது கண்டறியப்பட்டால், அது EVM எந்திரத்தை சிதைக்கும் செயலாக கருதி, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
தேவை ஏற்படின் மறுவாக்குப்பதிவு நடத்தவும் தயார்” என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.