

தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக போட்டியிடும் 27 வேட்பாளர்களை நேற்று கட்சி தலைமை அறிவித்தது. இந்த வேட்பாளர் பட்டியலில் தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையின் பெயர் இடம்பெறவில்லை.
அவர் கேட்ட தொகுதியை பாஜக தர மறுத்துவிட்டதால், வேறொரு தொகுதியில் அண்ணாமலையை நிறுத்த முயற்சி நடப்பதாக முன்னர் கூறப்பட்டது. இந்நிலையில் வேட்பாளர் பட்டியலில் அண்ணாமலையின் பெயர் இடம்பெறாதது அவரது தொண்டர்களுக்கு வருத்தத்தை அளித்துள்ளது.
கட்சி வேட்பாளர் பட்டியலில் தனது பெயர் இடம் பெறாதது குறித்து, தற்போது அண்ணாமலை பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அண்ணாமலை கூறுகையில், “தமிழக பாஜக என்னை வேட்பாளராக பரிந்துரைக்கவில்லை. அப்படி இருக்கையில் கட்சி தலைமை எப்படி எனது பெயரை வேட்பாளராக அறிவிக்கும். கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக 23 இடங்களில் போட்டியிட்டது.
நேரமின்மை காரணமாக என்னால் பல பாஜக வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்ய முடியவில்லை. அந்த மனக்குறையை இந்தத் தேர்தலில் நான் போக்கிக் கொள்வேன். காலம் இருக்கிறது; இன்னும் பல தேர்தல்கள் வரப்போகிறது. அப்போதுதேர்தலில் நிச்சயமாக நிற்பேன். என் மது அன்பு வைத்திருக்கும் மக்கள் எப்போதும் என்மேல் அன்புடன் தான் இருப்பார்கள். இந்த முறை ஆட்சி மாற்றம் நடப்பது உறுதி.
தேர்தலில் நான் போட்டியிட விரும்பவில்லை என்று கூறியதை கட்சி தலைமை ஏற்றுக் கொண்டதற்கு நான் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வருகின்ற மே 4-ம் தேதி தேர்தல் முடிவு வெளியான பிறகு, நான் ஏன் தேர்தலில் போட்டியிடவில்லை என்பதை தெரிவிப்பேன்” என அண்ணாமலை தெரிவித்தார்.