

கடலூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று பிரச்சாரம் மேற்கொள்ள இருந்த சூழலில், கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் நாளை (ஏப்ரல் 11) பிரச்சாரம் மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் மற்றும் தேர்தல் ஆணையத்திலும் தவெக நிர்வாகிகள் அனுமதி கோரினர். இதற்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் நாளை கடலூரில் நான்கு இடங்களில் பிரச்சாரத்தை மேற்கொள்ள இருக்கிறார் விஜய்.
கடலூரில் விஜய் பரப்புரைக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி இருக்கும் சூழலில், துணை முதல்வர் உதயநிதியின் பரப்புரை தள்ளிப் போயுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் கடலூர் மாவட்டத்தின் வடலூரில் நாளை பரப்புரையை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரியிருக்கிறார். ஆனால் நாளை விஜய் வடலூர் உள்பட கடலூர் மாவட்டத்தின் 4 இடங்களில் பரப்புரையை மேற்கொள்ள இருப்பதால், உதயநிதி ஸ்டாலினுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
முதலில் தவெக நிர்வாகிகள் அனுமதி கேட்டதால், உதயநிதிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. மாறாக நாளை மறுதினம் (ஏப்ரல் 12) உதயநிதி ஸ்டாலினை பரப்புரை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
இதன்படி ஞாயிற்றுக்கிழமை கடலூரில் உள்ள வடலூரில் பரப்புரையை மேற்கொள்கிறார் உதயநிதி ஸ்டாலின்.