தான்சானியாவின் வடக்கு பிராந்தியமான கிளிமஞ்சாரோவில், மோஷி (Moshi) - டாங்கா (Tanga) நெடுஞ்சாலையில், நேற்று முன்தினம் (சனிக்கிழமை) மாலை இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், குறைந்தது 40 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கர விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
சபாசபா (Sabasaba) பகுதியில் நடந்த இந்த விபத்து, ஒரு பேருந்தின் டயர் வெடித்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிர்திசையில் வந்த மற்றொரு பேருந்து மீது மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மோதிய வேகத்தில் இரண்டு பஸ்களும் தீப்பிடித்து எரிந்ததால், உள்ளே சிக்கிய பயணிகள் பலர் உயிரோடு கருகிப் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த செய்தி தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது.
கிளிமஞ்சாரோ பிராந்திய ஆணையர் நுர்டின் பாபு கூறுகையில், விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒரு திருமண நிகழ்ச்சிக்குச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் அடங்குவர். அடையாளம் காண முடியாத அளவுக்கு உடல்கள் எரிந்துபோனதால், உயிரிழந்தவர்களில் 36 பேரின் உடல்களை இன்னும் அடையாளம் காண முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
தான்சானிய அதிபர் சாமியா சுலுஹு ஹசன், இந்த துயர சம்பவம் குறித்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மேலும், சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும், இதுபோன்ற விபத்துகளைத் தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தான்சானியாவில் சாலை விபத்துகள் ஒரு தொடர் பிரச்சனையாக உள்ளன. பெரும்பாலும் வாகனங்களின் மோசமான பராமரிப்பு, ஓட்டுநர்களின் அஜாக்கிரதை, மற்றும் சாலை விதிமுறைகளை மீறுவதே இத்தகைய விபத்துகளுக்குக் காரணமாகும். இந்த விபத்து குறித்த விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.