

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), தவணை முறையில் (EMI) மொபைல் போன் வாங்குபவர்களுக்கு ஒரு முக்கிய விதியை அமல்படுத்தத் தயாராகி வருகிறது. இனி, தவணைத் தொகையைச் செலுத்தத் தவறினால், வங்கிகள் தொலைவிலிருந்து வாடிக்கையாளர்களின் மொபைல் போனை தானாகவே லாக் செய்ய முடியும். இதற்கான அனுமதியை ரிசர்வ் வங்கி விரைவில் வழங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபகாலமாக EMI மூலமாக வீட்டு கடன், வாகனம், டிவி, பிரிட்ஜ், செல்போன் போன்ற பொருட்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.
ஹோம்கிரெடிட் ஃபைனான்ஸ் (Home Credit Finance) என்ற நிறுவனத்தின் 2024 ஆம் ஆண்டு ஆய்வுப்படி, மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமான மின்னணுப் பொருட்கள் தவணை முறையில் வாங்கப்படுவதாக தெரியவந்துள்ளது. அப்படி வாங்கப்படும் மொபைல் போன்களுக்கான EMI முறையாக செலுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு அதிகரித்து வருகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு புதிய விதிமுறை தொடர்பாக ரிசர்வ் வங்கிக்கு பலரும் கோரிக்கை வைத்த நிலையில் இந்த புதிய சட்ட கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.
அதன்படி ஸ்மார்ட்போன் EMI-க்கான RBI-யின் 'போன்-லாக்கிங்' (phone-locking) விதிமுறைகள், EMI தவணை செலுத்தத் தவறினால் என்ன நடக்கும், எந்தெந்த முக்கிய அம்சங்கள் தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும், தனியுரிமை தொடர்பான கவலைகள் மற்றும் நிலுவையில் உள்ள EMI-ஐச் செலுத்திய பிறகு என்ன நடக்கும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம் வாங்க.
EMI-ல் ஸ்மார்ட்போன் வாங்குபவர்கள் இதுகுறித்து தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். மாதத்தவணை முறையில் போன் வாங்கும் அனைவருக்கும் இச்செய்தி பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.
குறிப்பாக EMI வாங்குபவர்களுக்காவே ரிசர்வ் வங்கி புதிதாக சில விதிமுறைகளை கொண்டு வந்திருக்காங்க...
வெளியாகியுள்ள அறிக்கைகளின்படி, கடந்தாண்டு, தவணை செலுத்தாத வாடிக்கையாளர்களின் போன்களை லாக் செய்யும் நடைமுறையை உடனடியாக நிறுத்தும்படி வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியது. இதற்கு முன், தவணை முறையில் போன் வாங்கும்போதே, அதில் ஒரு சிறப்பு செயலி (App) நிறுவப்பட்டது. இந்தக் செயலி மூலம், வாடிக்கையாளர் சரியான நேரத்தில் தவணையைச் செலுத்தத் தவறினால், வங்கி அல்லது கடன் வழங்கும் நிறுவனம் தொலைவிலிருந்து போனை லாக் செய்யும் உரிமையைப் பெற்றது.
ஆனால் தற்போது கொண்டுவரப்பட உள்ள புதிய விதியின்படி, போனை லாக் செய்வதற்கு முன் கடன் வாங்குபவரின் முன் அனுமதி (Prior Consent) பெறுவது கட்டாயமாக்கப்படும். வீட்டுக்கடன், வாகனக் கடன் அல்லது தனிநபர் கடன்களுக்கு உங்கள் ஸ்மார்ட்போனையோ அல்லது லேப்டாப்பையோ நிதி நிறுவனங்கள் முடக்க முடியாது (மொபைல் லாக்).
அந்தந்த குறிப்பிட்ட சாதனத்தை வாங்குவதற்காக மட்டுமே கடன் பெறப்பட்டிருந்தால் மட்டுமே, அதற்கான விதிமுறைகளைப் பின்பற்றி நடவடிக்கை எடுக்கலாம்.
EMI கட்டாமல் 30 நாட்கள் காலக்கெடு முடிந்து (overdue) விட்டால் எந்த ஒரு எந்தவிதக் கட்டுப்பாடுகளையோ அல்லது நடவடிக்கையோ அந்த பொருள் மீது மேற்கொள்ளப்படாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
அதற்கு பிறகு அவசியமற்ற செயலிகளை (non essential apps) எல்லாம் முடக்கப்படும் (block).
போனுக்கு EMI கட்டணம் செலுத்தி 30 நாட்களுக்குள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. 30 நாட்களுக்கு மேல் தாமதமானால் மட்டுமே படிப்படியான கட்டுப்பாடுகளை விதிக்கலாம். 60 நாட்களுக்கு மேல் நிலுவையில் இருந்தால் மட்டுமே ஒப்பந்தப்படி முழுமையான கட்டுப்பாடுகளை விதிக்க முடியும்.
அதாவது 60 நாட்களுக்கு மேல் நாம் EMI கட்டாமல் overdue-ல் போனால் மட்டுமே நம்முடைய போனில் உள்ள சில setting accessஐ முடக்கி விடுவார்கள். இதனால் புதிதாக எந்த ஒரு ஆப்பையும் install செய்ய முடியாது.
ஆனால் குறிப்பாக ஒரு சில விஷயங்களை கண்டிப்பாக செய்யவே கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போனை முடக்கினாலும், வரும் அழைப்புகள் (Incoming)மற்றும் செல்லும் அழைப்புகளை (out going)தடுக்கக்கூடாது. அதேபோல் SMS மற்றும் அவசரக்கால Emergency SOS வசதிகள் உள்ளிட்ட முக்கியமான அம்சங்களை முடக்கவோ, துண்டிக்கவோ கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக வேலை செய்பவர்களுடைய அலுவலக வேலை எந்த ஒரு சார்ந்த செயலியிலும் கை வைக்கக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் அந்த மொபைல் போனில் உள்ள எந்தவொரு தனிப்பட்ட தரவையும் (personal data) அணுகவோ, பார்க்கவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதாவது கடன் வசூலிப்பு நடவடிக்கையாக போனை முடக்கும் போது, பயனரின் தனிப்பட்ட புகைப்படங்கள்(photos), தொடர்புகள்(contacts), குறுஞ்செய்திகள் (SMS) அல்லது லொகேஷன் ஹிஸ்டரி ( location history) அல்லது அழைப்புப் பதிவுகள் (call logs) ஆகியவற்றை நிதி நிறுவனங்கள் எக்காரணம் கொண்டும் பார்க்கவோ அல்லது அணுகவோ கூடாது.
அதேசமயம் புதிய விதிமுறைகளின்படி, நுகர்வோர் நிலுவைத் தொகைகள் (EMI)முழுமையாக செலுத்தியவுடன், சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம் அல்லது வங்கி அடுத்த 1 மணி நேரத்திற்குள் அந்த மொபைல் போனை அன்லாக் (Unlock) செய்து கொடுக்க வேண்டும். இல்லையெனில், தாமதமாகும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ரூ. 250 அபராத இழப்பீட்டைச் செலுத்த வேண்டும்.
இந்தத் தொகை ஒரு நபருக்கு அதிகபட்சமாக ரூ. 20,000 வரை மட்டுமே கொடுக்கப்படும்.