

இந்திய ஜனநாயகத்தின் தூண்களாக விளங்குபவை மத்திய மற்றும் மாநில அரசுத் துறைகள். இந்தத் துறைகளின் பிரம்மாண்டமான கட்டிடங்களுக்குப் பின்னால், பல தசாப்தங்களாகத் தங்கள் வியர்வையையும் இரத்தத்தையும் சிந்தி உழைத்த லட்சக்கணக்கான 'தற்காலிக ஊழியர்களின்' (Casual Labourers) கண்ணீர்க் கதைகள் மறைந்து கிடக்கின்றன.
தபால் துறை, இரயில்வே, பொதுப்பணித்துறை (PWD), நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் வனத்துறை என அனைத்து இடங்களிலும் தினக்கூலிகளாகவும், தொகுப்பூதியத்திலும் சேர்ந்த மனிதர்கள், தங்களின் முப்பது, நாற்பது ஆண்டுகால வாழ்க்கையை அந்தத் துறைகளுக்காகவே அர்ப்பணித்துவிட்டு, இறுதியில் வெறும் கையோடு வீட்டிற்கு அனுப்பப்படும் அவலம் இந்தியாவில் தொடர்கதையாகவே இருந்து வந்துள்ளது.
"அவர்கள் முறைப்படி பணி நிரந்தரம் செய்யப்படவில்லை; தற்காலிக ஊழியர்களுக்குப் பென்ஷன் விதிமுறைகள் பொருந்தாது" என்கிற அதிகாரத்துவத்தின் ஒற்றை வாதம், அந்த விளிம்புநிலை மனிதர்களின் முதுமைக் காலத்தைப் பசி மற்றும் வறுமையின் பிடியில் தள்ளி வந்தது.
இந்த நீண்ட கால அநீதிக்கு, உச்ச நீதிமன்றம் தனது அண்மைய வரலாற்றுச் சிறப்புமிக்க அதிரடித் தீர்ப்பின் மூலம் ஒரு நிரந்தர முற்றுப்புள்ளியை வைத்துள்ளது.
மத்திய தபால் துறையில் தினக்கூலியாக சேர்ந்து, முப்பது ஆண்டுகளுக்கு மேல் உழைத்து மறைந்த ஒரு தற்காலிக ஊழியரின் விதவை மனைவிக்கு (பிகானி தேவி வழக்கு) பென்ஷன் மறுக்கப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு இந்தியத் தொழிலாளர் சட்ட வரலாற்றில் ஒரு புதிய மைல்கல் ஆகும்.
நீதிமன்றம் மிகத் தெளிவாக பிரகடனப்படுத்தியுள்ளது:
ஓய்வூதியம் (Pension) என்பது ஏதோ ஒரு முதலாளியோ அல்லது அரசாங்கமோ தன் ஊழியர்களுக்கு வழங்கும் 'அன்பளிப்போ' அல்லது 'பிச்சையோ'அல்ல. அது ஒரு தொழிலாளி தன் வாழ்நாளைக் கொடுத்து உழைத்ததற்காகப் பெறும் சட்டபூர்வமான உரிமை. அது ஒரு 'தள்ளிவைக்கப்பட்ட கூலி' (Deferred Wage).
பென்ஷன் என்பது இந்தத் தேசத்தின் சமூக மற்றும் பொருளாதார நலனின் மிக முக்கிய முகமாகும் (A Facet of Social Welfare)."
ஒரு தொழிலாளி, நிரந்தர ஊழியர்களுக்கு நிகரான அதே வேலைகளையும், அதே பொறுப்புகளையும் பல தசாப்தங்களாகச் செய்யும்போது, அவரை வெறும் 'தற்காலிக ஊழியர்' (Casual Labourer) என்று பெயர் காட்டி (Nomenclature), அவருக்குச் சேர வேண்டிய சமூகப் பாதுகாப்புப் பலன்களை மறுப்பது சட்டப்படி செல்லாது என்றும், அது அப்பட்டமான சுரண்டல் என்றும் நீதிமன்றம் சாடியுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான விடிவெள்ளி மத்திய அரசின் கீழ் இயங்கும் தபால் துறை, இரயில்வே போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் 'தற்காலிக அந்தஸ்து' (Temporary Status) பெற்று, குரூப்-D ஊழியர்களுக்கு நிகராக வேலை செய்த அனைத்து தற்காலிக ஊழியர்களுக்கும், கிராமப்புறங்களில் முதுகெலும்பாகச் செயல்படும் கிராமின் தக் சேவகர்கள் (GDS) மற்றும் பிரான்ச் போஸ்ட்மாஸ்டர்கள் (BPM) போன்ற ஊழியர்களுக்கும் இந்தத் தீர்ப்பு ஒரு மாபெரும் பொருளாதார நீதியை (Economic Justice) நிலைநாட்டியுள்ளது.
நிர்வாகத்தின் மெத்தனத்தால் அல்லது இலாகா விதிகளின் தாமதத்தால், ஒரு ஊழியரைப் பணி நிரந்தரம் செய்யாமல் காலம் தாழ்த்துவது அரசாங்கத்தின் தவறு; அதற்காக ஒரு ஏழைத் தொழிலாளியின் வாழ்வாதாரத்தைப் பறிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்குக் கறாரான உத்தரவைப் பிறப்பித்துள்ளது
இந்தத் தீர்ப்பின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், இது மத்திய அரசு ஊழியர்களுக்குத் தபால் துறை வழக்கில் வழங்கப்பட்டிருந்தாலும், இதன் நீதியும் தத்துவமும்,மாநில அரசுத் துறைகளில் (State Government Departments) உள்ள தற்காலிக ஊழியர்களுக்கும் முழுமையாகப் பொருந்தும் என்பதாகும்.
நமது தமிழ்நாடு அரசுத் துறைகளான பொதுப்பணித்துறை (PWD), நெடுஞ்சாலைத்துறை, காடுகள் மற்றும் வனவிலங்குத் துறை, மற்றும் பல்வேறு நகராட்சிகள், மாநகராட்சிகளில் பல்லாயிரக்கணக்கான தூய்மைப் பணியாளர்கள், சாலைப் பணியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் இன்னும் தினக்கூலி (Daily Wage) மற்றும் தொகுப்பூதிய (Consolidated
Pay) அடிப்படையில் பல வருடங்களாகப் பணியாற்றி வருகிறார்கள்.
தமிழ்நாடு ஓய்வூதிய விதிகளில்(Tamil Nadu Pension Rules, Rule 11), தற்காலிக ஊழியர்கள் பிற்காலத்தில் நிரந்தரம் செய்யப்பட்டால், அவர்கள் தினக்கூலியாக உழைத்த மொத்த வருடங்களில் பாதியை (50%) பென்ஷன் கணக்கிற்குக் கூட்டிக் கொள்ளலாம் என்ற சலுகை இருந்தாலும், நடைமுறையில் பல தடைகள் உள்ளன.
குறிப்பாக, ஏப்ரல் 1, 2003-க்கு பிறகு கொண்டு வரப்பட்ட 'புதிய ஓய்வூதியத் திட்டம்' (CPS) காரணமாக, அதற்கு முன்னால் 20 ஆண்டுகள் தினக்கூலியாக உழைத்து, 2003-க்குப் பிறகு நிரந்தரம் செய்யப்பட்ட பல ஏழை மாநில அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதியம் மறுக்கப்பட்டு, அவர்கள் நீதிமன்றங்களில் இப்போதும் போராடி வருகிறார்கள்.
இத்தகைய சூழலில், உச்ச நீதிமன்றத்தின் இந்த புதிய தீர்ப்பு மாநில அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு ஒரு மாபெரும் வச்சிராயுதமாக மாறியுள்ளது. சட்டம் மற்றும் நீதியின் அடிப்படைப் பார்வை ( ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் ஒன்றுதான்.
அரசாங்கம் என்பது ஒரு முன்மாதிரி முதலாளியாக (Model Employer) இருக்க வேண்டும்; அது தன் ஊழியர்களின் உழைப்பைச் சுரண்டக் கூடாது" என்கிற உச்ச நீதிமன்றத்தின் இந்த வலுவான தார்மீகக் கருத்து, மாநில அரசு ஊழியர்களின் வழக்குகளுக்கும் ஒரு மிகச்சிறந்த 'முன்னுதாரணமாக' (Precedent) விளங்கும்.
மாநில அரசுத் துறைகளில் தற்காலிகமாக உழைத்து ஓய்வு பெற்ற அல்லது பாதிக்கப்பட்ட ஊழியர்கள், தங்களுக்குப் பென்ஷன் மறுக்கப்படும்போது இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பை முதன்மைச் சான்றாகச் சுட்டிக்காட்டி, சென்னை உயர் நீதிமன்றத்தின் மூலம் தங்களுக்கான முழுமையான பொருளாதார நீதியைப் பெற முடியும்.
சட்டங்கள் என்பவை காகிதத்தில் வாசிப்பதற்கோ அல்லது அதிகாரிகளின் மேஜை ஆவணங்களை அலங்கரிப்பதற்கோ அல்ல; அவை விளிம்புநிலை மனிதர்களின் பசித் துயரைத் தீர்ப்பதற்கே என்பதை இந்தத் தீர்ப்பு நிரூபித்துள்ளது.
மத்திய அரசு ஊழியராக இருந்தாலும் சரி, மாநில அரசு ஊழியராக இருந்தாலும் சரி, ஒரு மனிதனின் உழைப்பு என்பது உழைப்புதான். அதில் தற்காலிக உழைப்பு, நிரந்தர உழைப்பு என்று பிரித்துப் பார்த்துப் பென்ஷனை மறுப்பது சமூக நீதிக்கு எதிரானது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள வாழ்வுரிமையின் படியும், மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் இந்த வரலாற்றுத் தீர்ப்பின் படியும், இந்தியாவில் உள்ள அனைத்து மத்திய மற்றும் மாநில அரசுத் தற்காலிக ஊழியர்களுக்கும் பென்ஷன் என்பது அவர்களின் உழைப்பிற்குரிய அடிப்படை உரிமையாகும்.
இந்தச் சட்ட விழிப்புணர்வு ஒவ்வொரு ஏழைத் தொழிலாளியின் இல்லத்தையும் சென்றடையும் போதுதான், இந்தத் தேசம் உண்மையான சமூகப் பொருளாதார நீதியை அடையும் என்பதில் ஐயமில்லை!