

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி தமிழக வெற்றிக்கழகம் நடத்திய பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அது தொடர்பான விசாரணையை சிபிஐ மேற்கொண்டு வந்த நிலையில் தமிழ்நாட்டின் சட்டசபை தேர்தல் நடைபெற்றது.
சட்டசபை தேர்தல் நடைபெற்ற காரணத்தால் இடையில் சிபிஐ தனது விசாரணை நிறுத்தி வைத்திருந்தது.சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் வெற்றி அடைந்து தற்போது ஆட்சி அமைத்துள்ளது. இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐ மீண்டும் கையில் எடுத்து ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி அஜஸ் ரத்தோகி கண்காணிப்பில் விசாரிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வழக்கு தொடர்பான பல கட்ட விசாரணையை இதற்கு முன்பே முடித்திருந்தது சிபிஐ. இவ்வழக்கு தொடர்பாக தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சிபிஐ ஏற்கெனவே பலமுறை நேரில் விசாரணை செய்துள்ளது.குறிப்பாக தவெக தலைவரும் தமிழ்நாட்டின் முதல்வரும் ஆன விஜயின் முன்னிலையில் இந்த சம்பவம் நடந்ததால் அவரையும் சிபிஐ அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்திருந்தனர் . இதைத் தொடர்ந்து விஜய் கடந்த ஜனவரி மாதம் 12 மற்றும் 19ஆம் தேதிகளில் டெல்லி சென்று சிபிஐ முன் ஆஜரானார்.
இதனைத் தொடர்ந்து 3வது முறையாக மீண்டும் அவர் கடந்த மார்ச் 10ம் தேதி ஆஜராக வேண்டும் என சொல்லப்பட்டிருந்த நிலையில் தமிழ்நாட்டில் நிலவி வந்த தேர்தல் சூழலை காரணம் காட்டி அவர் மறு தேதி கோரி சிபிஐ இடம் அனுமதி கேட்டிருந்தார். இதன் அடிப்படையில் தேதி மாற்றத்துடன் 15ம் தேதி விஜயிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதனை அடுத்து கடந்த ஏப்ரல் மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெற்ற நிலையில் சிபிஐ விசாரணை மேற்கொண்டு நடைபெறவில்லை . இந்த நிலையில் தான் இது தொடர்பான விசாரணையை சிபிஐ மீண்டும் தொடங்கியுள்ளது.
கரூரில் 41 பேர் பலியான சம்பவத்தின் போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் உட்பட 10 காவலர்களுக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பி இருந்த நிலையில் ஒரு சில காவலர்கள் மட்டுமே சிபிஐ விசாரணைக்கு ஆஜராகி உள்ளதாகவும், அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. கரூர் சுற்றுலா மாளிகையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் இந்த அதிகாரிகள் விசாரணைக்கு ஆஜராகி வருவதாக கூறப்படுகிறது.
தவெக கட்சி பெரும்பான்மை வெற்றி பெற்று அக்கட்சியின் தலைவர் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்ற சூழலில் இந்த வழக்கு தொடர்பான விசாரணையை சிபிஐ மீண்டும் துவங்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
வழக்கு விசாரணை எப்படி செல்லும் என்பதை அறிய பொது மக்களும் ஆவலாக உள்ளனர்.