நாடு முழுவதும் சந்தைகளில் விற்பனை செய்யப்படும் மருந்துகளின் தரம் குறித்து ஒவ்வொரு மாதமும் மத்திய மாநில அரசுகள் ஆய்வுகளையும், பரிசோதனைகளையும் நடத்துகிறது. மருந்தகங்கள், சில்லறை விற்பனையகங்கள், மொத்த விற்பனை கூடங்கள், கிடங்குகளில் ஏதேனும் சில மருந்துகளை எடுத்து பரிசோதிப்பது வழக்கம். மருந்து கட்டுப்பாட்டு வாரிய வழிமுறைகளின்படி உற்பத்தி செய்யப்படவில்லை என்றால் அவை தரமற்ற மருந்துகளாக கருதப்படும்.
அந்த வகையில், கடந்த ஜனவரி மாதம் நாடு முழுவதும் 1000த்திற்கும் மேற்பட்ட மருந்துகள் ஆய்வு செய்யப்பட்டத்தில் 215 மருந்துகள் தரமற்றவையாக என்பதும், 3 மருந்துகள் போலி என்பது கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதில் தமிழகத்தில் இருந்து 43 மருந்துகள் இடம் பெற்றிருந்தன. தமிழகத்தில் ஜனவரி மாதத்தில் 147 மருந்துகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில் 29 சதவீத மருந்துகள் மருந்து கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளின் கீழ் உற்பத்தி செய்யப்படாதது தெரியவந்தது.
இதனால் தரம் குறைவாக இருப்பதாக கணக்கில் கொள்ளப்பட்டது. இதேபோல் கர்நாடகாவில் 21 சதவீதமும், ராஜஸ்தானில் 17 சதவீதமும் மற்றும் தெலுங்கானா, கேரளா, ஒடிசா, ஜம்மு-காஷ்மீா், ஹிமாசலப் பிரதேத்திலும் தரமற்ற மருந்துகள் இருப்பது ஆய்வில் கண்டறிப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த மருந்து விபரங்கள், மத்திய மருந்து தரக்கட்டுபாட்டு வாரியத்தின், https://cdsco.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதேசமயம், ஒரு குறிப்பிட்ட உற்பத்தி தொகுப்பு (பேட்ச்) மருந்துகள் தரப் பரிசோதனையில் தோல்வியடைவது, அந்தத் தொகுப்புக்கு மட்டுமே பொருந்தும் என்றும், சந்தையில் உள்ள மற்ற மருந்துகள் குறித்து கவலைப்படத் தேவையில்லை என்றும் மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, புதுச்சேரியிலும் கடந்த ஒரு வாரமாக விரிவான கண்காணிப்பு மற்றும் சோதனையின் அடிப்படையில், தரநிலைக்கு உட்படாததாக கண்டறியப்பட்ட 45 வகையான மருந்துகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதில் சில மருந்துகள் தரச் சான்றிதழ் விதிமுறைகளை பூர்த்தி செய்யாதது தெரியவந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் குறிப்பாக, Himachal Pradesh மாநிலம் பவுண்டா சாகிப் நகரில் உள்ள தொழிற்பேட்டையில் இயங்கி வரும் ஜி லெஃப்ட்ரி நிறுவனம் தயாரித்த ‘நிக் ரொண்டில் மாத்திரை ஐ.பி 5 எம்.ஜி’ (உற்பத்தி தேதி: 07/2025, காலாவதி தேதி: 06/2027) என்ற நெஞ்சுவலி மாத்திரை உரிய தரம் இல்லாததாக கண்டறியப்பட்டுள்ளதால் அந்த மருந்தின் விற்பனை மற்றும் விநியோகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை புதுச்சேரி மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி ஆனந்த் கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
எனவே பொதுமக்கள் தரமற்ற அல்லது சந்தேகத்திற்கிடமான மருந்துகள் குறித்து அருகிலுள்ள மருந்து கண்காணிப்பு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என்றும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.