அமெரிக்கா ஈரான் போர் காரணமாக எழுந்த பின்விளைவுகளில் முக்கியமானது எரிவாயு மற்றும் எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு . இந்தியா பயன்படுத்தும் LPG-யில் சுமார் 60% வரை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. போர் காரணமாக கப்பல் போக்குவரத்து, காப்பீடு செலவு, விநியோக நேரம் ஆகியவை பாதிக்கப்படுவதால், கேஸ் தட்டுப்பாடு என்பது இந்தியாவில் தற்போதைய பேசுபொருளாக மாறியுள்ளது.
ஏற்கனவே பெங்களூரில் Commercial LPG சிலிண்டர் விநியோகம் திடீரென நிறுத்தப்பட்டதால் பல ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் இன்று முதல் மூடப்படுகிறது என்ற செய்து வெளியானது.அதில் ஆறுதலான செய்தி என்னவென்றால் மருத்துவமனைகளுக்கு அருகில் உள்ள சில உணவகங்கள் மற்றும் ஆன்லைன் டெலிவரி மூலம் இயங்கும் சில பெரிய கிளவுட் கிச்சன்கள் மட்டும் குறைந்த அளவில் இயங்குகிறது.
தொடர்ந்து தமிழ்நாட்டிலும் கேஸ் (சமையல் எரிவாயு) தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. உதாரணமாக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் வெரைட்டீஸ் கொடுக்க முடியவில்லை : ஆனந்தா ஹோட்டலில் வைக்கப்பட்ட அறிவிப்புப் பலகை , திருநெல்வேலி மாவட்டத்தில் வணிக சிலிண்டர்கள் விநியோகம் குறைப்பு என்றும் ,சேலம் மாவட்டத்தில் வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் என்றும் இது போன்று பல மாவட்டங்களில் கேஸ் குறித்த கவலை மக்களிடம் எழுந்துள்ளது.
தினமும் சுமார் 2,000 வணிக சிலிண்டர்கள் விநியோகிக்கப்டும் நிலையில் தற்போது 200 மட்டுமே விநியோகம் என்றும் வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சில இடங்களில் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக செய்திகள் வந்தாலும், அது முழு இந்தியாவிலும் வீட்டு (Domestic) LPG விநியோகம் நிறுத்தப்பட வில்லை என்பதை கவனிக்க வேண்டும். காரணம் மத்திய அரசு வீட்டு பயன்பாட்டு 14.2 kg சிலிண்டர்களுக்கு முன்னுரிமை கொடுக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாகவே 19 kg வணிக சிலிண்டர்கள் (ஹோட்டல், உணவகம்) விநியோகம் சில இடங்களில் குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் இந்தியாவில் உள்ள LPG கையிருப்பு (stocks) சுமார் 25–30 நாட்கள் தேவையை நிறைவேற்றும் அளவு உள்ளது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கேஸ் தட்டுப்பாடு என்ற செய்தி வந்ததும் அச்சம் அல்லது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில இடங்களில் மக்கள் தேவைக்கு மேல் அதிகமாக சிலிண்டர் பதிவு செய்வதும் காரணமாகவும் விநியோகம் தாமதமாகிறது என்றும் நிறுவனங்கள் அறிவித்துள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள LPG (எரிவாயு) தட்டுப்பாடு நீண்ட காலம் நீடிக்கும் நிலை இல்லை என்று மத்திய அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் கூறுகின்றன. தற்போதைய நிலை தற்காலிக விநியோக சிக்கல் எனக் கூறப்படுகிறது.
Indian Oil Corporation உள்ளிட்ட எண்ணெய் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் சில பகுதிகளில் Commercial LPG (19 kg) சிலிண்டர்களின் விநியோகத்தை தற்காலிகமாக கட்டுப்படுத்தியுள்ளன.இந்த கட்டுப்பாடு காரணமாக உணவகங்கள், கடைகள் போன்ற வணிக நிறுவனங்களுக்கு சிலிண்டர் வழங்கல் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் வீட்டு பயன்பாட்டுக்கான 14.2 kg LPG சிலிண்டர் விநியோகம் தொடர்ந்து நடைபெறுகிறது என்றும் தமிழ்நாட்டில் 3 வாரங்களுக்கு தேவையான வீட்டு உபயோக சிலிண்டர்கள் கையிருப்பு உள்ளதாகவும் உணவுத்துறை அதிகாரிகளின் அறிவிப்பு கேஸ் பிரச்சினை குறித்த கவலையை நீக்கும் விதமாக உள்ளது.
நிபுணர்கள் மற்றும் அரசு தரப்பின் மதிப்பீட்டுப்படி சுமார் 1–2 வாரங்கள் வரை சில இடங்களில் விநியோகம் சீராக வர தாமதம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் LPG சிலிண்டர் மீண்டும் பதிவு செய்யும் இடைவெளி 21 நாட்களிலிருந்து 25 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளதையும், சிக்கனமாக எரிவாயுவை பயன்படுத்துவதையும் பொது மக்கள் கவனத்தில் கொண்டால் போர் காரணமாக எழும் இது போன்ற சிக்கல்களுக்கு தீர்வைக் காணலாம்.
இந்நிலையில் சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் எஸ்மா சட்டத்தை ஒன்றிய அரசு அமல்படுத்தியது.வணிகர்கள் அல்லது தனிநபர்கள் சிலிண்டர்களைப் பதுக்குவதைத் தடுக்க இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிய உத்தரவின்படி, அவசியப் பொருட்கள் பராமரிப்புச் சட்டமான (Essential Services Maintenance Act - ESMA) கீழ் கீழ்க்கண்ட தண்டனைகள் விதிக்கப்படும்:
சமையல் எரிவாயு சிலிண்டர்களை பதுக்கினாலோ அல்லது கள்ள சந்தையில் விற்பனை செய்தாலோ 3 மாதங்கள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை.
மத்திய கிழக்கு நாடுகளின் போர்ச் சூழலால் சிலிண்டர் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைக் கட்டுப்படுத்தவும், சாமானிய மக்களுக்குத் தடையின்றி சிலிண்டர் கிடைப்பதை உறுதி செய்யவும் இந்தச் சட்டம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. சட்டத்தை மீறுவோர் மீது எவ்வித பாரபட்சமும் இன்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றிய அரசு எச்சரித்துள்ளது.