

இந்தியாவில் வாகனங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாலும், நகர்ப்புற போக்குவரத்து அமைப்புகளின் சிக்கலான தன்மையாலும் போக்குவரத்து விதிமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலையளிப்பதாக உள்ளது. அதேசமயம் நாட்டில் அதிவேகமாக வாகனம் ஓட்டுவதால் விபத்துகளும், உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே.
இந்தியாவில் மோட்டார் வாகனச் சட்டம் (திருத்தப்பட்ட 2021/2023) படி, போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அதிக அபராதம் மற்றும் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
தலைக்கவசம் அணியாமை, சீட் பெல்ட் இல்லாமை, அதிக வேகம், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் சிவப்பு விளக்கை மீறுதல் போன்றவை முக்கிய விதிமீறல்களாகக் கருதப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது.
போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டாலும், நாளுக்கு நாள் போக்குவரத்து விதிமீறல்கள் அதிகரித்து வருவதும், அதனால் விபத்து மற்றும் உயிரிழப்புகளும் ஏற்படுவது அரசாங்கத்திற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு முடிவுகட்டும் பொருட்டு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த உள்ளது. அதாவது இந்தியாவில் போக்குவரத்து விதிமீறல்களைக் குறைக்க,
'பெனால்டி பாயிண்ட்ஸ்' (Penalty Points) அல்லது 'எதிர்மறைப் புள்ளிகள்' முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதில், ஒவ்வொரு விதிமீறலுக்கும் ஓட்டுநர் உரிமத்தில் (Driving Licence) குறிப்பிட்ட புள்ளிகள் சேர்க்கப்படும். 24 மாத காலப்பகுதியில் (Block period) அதாவது, 2 ஆண்டுகளில் 12 புள்ளிகள் சேர்ந்தால், உரிமம் 1 ஆண்டுக்கு இடைநீக்கம் (Suspension) செய்யப்படலாம்.
இரண்டாவது முறையாக 12 புள்ளிகள் சேர்ந்தால், அவர்களது ஓட்டுநல் உரிமம் 5 ஆண்டுகள் வரை இடைநீக்கம் செய்யப்படலாம்.
சாலை விபத்துக்களைக் குறைக்கவும், பொறுப்பான ஓட்டுநர்களை உருவாக்கவும் இந்தத் திட்டம் உதவும் என மத்திய அரசு நம்புகிறது.
ஹெல்மெட் அணியாமல் இருத்தல், சிக்னல் தாண்டுதல், செல்போன் பயன்பாடு, அதிவேகம் (Over speeding), மற்றும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல் போன்ற ஒவ்வொரு குற்றத்திற்கும் குறிப்பிட்ட புள்ளிகள் (1 முதல் 5 வரை) வழங்கப்படும்.
அதாவது, தவறான பக்கம் வாகனம் ஓட்டிச்சென்றால் (wrond side) போனால் 5 முதல் 6 புள்ளிகள்,
சிக்னல் தாண்டுதல், தவறான பாதையில் செல்லுதல், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டினால் 2 புள்ளிகள்
சீட் பெல்ட் போடவில்லை என்றால் 2 முதல் 3 புள்ளிகள்,
ஹல்மெட் (Helmet)போடாமல் போனால் 2 முதல் 3 புள்ளிகள்,
அதிக வேகமாக (over speeding) வாகனம் ஓட்டினால் 2 முதல் 3 புள்ளிகள்,
சிக்னலில் தாண்டினால் (Red Light Violation)3 முதல் 4 புள்ளிகள்,
ஆபத்தான/அதி வேகமாக வாகனம் ஓட்டினால் (Dangerous/Rash Driving) 6 முதல் 8 புள்ளிகள்,
செல்போன் பார்த்துக்கொண்டு வண்டி ஓட்டினால் 5 முதல் 6 புள்ளிகள்,
குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் (drunk and drive) 12 புள்ளிகள்
என ஆபத்தில் ஆழ்த்தக்கூடிய ஒவ்வொரு போக்குவரத்து மீறுபவர்களுக்கு அதற்கு தகுந்த மாதிரி இந்தியாவில் புள்ளி முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மக்களே இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த புள்ளிகள் எல்லாம் ரிவார்டு புள்ளிகள் கிடையாது, தண்டனை புள்ளிகள்(penalty points).
வாகனம் ஓட்டும் போது குறிப்பிட்ட நபரின் மேல் இந்த புள்ளிகள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அவர்களுடைய லைசென்ஸ் கேன்சல் செய்வதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது.
தற்போது சோதனை முறையில் 100 மாவட்டங்களில் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. விரைவில நாடு முழுவதும் தீவிரமாக அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
எனவே வாகன ஓட்டிகளே நீங்கள் சாலைகளில் வாகனத்தில் செல்லும் போது நீங்கள் செய்யும் ஒவ்வொரு தவறுக்கும் புள்ளிகள் கணக்கிடப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். புள்ளிகள் அதிமாகும் பட்சத்தில் உங்கள் லைசென்ஸை இழக்க வேண்டி வரலாம்.
நாடு முழுவதும் போக்குவரத்து விதிமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த அரசாங்கம் இந்த புதிய கட்டுப்பாடுகளை விரைவில் அமல்படுத்த உள்ளது.