
இணையத்தில் அந்தரங்கப் படங்கள், வீடியோக்கள் பரவினால் உடனடியாக நீக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பெண் வழக்கறிஞர் ஒருவர், தான் காதலிக்கும்போது காதலனுடன் நெருக்கமாக இருந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களிலும், ஆபாச இணையதளங்களிலும் பரவி வருவதாகவும், தன்னுடைய அந்தரங்க வீடியோக்களை நீக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், இந்த அந்தரங்க வீடியோ காட்சி இன்னும் 9 இணையதளங்களில் வேகமாக பரவி வருவதாகக்கூறி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சில உத்தரவுகளை பிறப்பித்திருந்தது.
அதில், பெண் வழக்கறிஞரின் வீடியோக்களை உடனடியாக நீக்க இணையதளங்களுக்கும், இது போன்ற வீடியோக்கள் இணையத்தில் பரவுவதைத் தடுக்கும் வகையிலும், புகார் அளிக்கும் வகையிலும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
அப்போது மத்திய அரசு தரப்பில், மனுதாரர் தரப்பில் ஏற்கனவே வழங்கப்பட்ட இணையதளங்களின் 'லிங்க்'கள் முடக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், ஆபாச படம் மற்றும் அந்தரங்க வீடியோக்களை நீக்குவதற்கும், புகார் அளிக்கவும் ‘இணையதளம் மற்றும் இலவச தொலைபேசி எண்’ணை மத்திய அரசு அறிவித்துள்ளது.
அந்த வகையில், ‘சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்களில் பெண்களின் ஆபாச வீடியோக்கள் இணையத்தில் பரவுவதாக புகார் அளிக்கப்பட்டால் அவற்றை இணையதள சேவை நிறுவனங்கள் 24 மணி நேரத்துக்குள் நீக்க நடவடிக்கை எடுக்கும் வகையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு உள்ளது.
மேலும், இது குறித்து புகார் செய்ய ‘www.cybercrime.gov.in' என்ற இணையதளமும், 1930 இலவச தொலைபேசி எண்ணும் அறிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ‘ஒன் ஸ்டாப்' மையங்கள் மூலமாகவும் பாதிக்கப்படும் பெண்கள் புகார் அளிக்கலாம் என்றும் சட்ட உதவிகள், உளவியல் ஆலோசனைகள் பெறலாம்' என்று கூறப்பட்டது.