

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது. அதேசமயம், அதிக காசநோயாளிகளை கொண்ட பட்டியலிலும் இந்தியா தான் முதலிடத்தில் இருக்கிறது. காசநோய் உள்ள நோயாளிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, நோயின் வீரியத்தை எளிதாக்க உதவும் நல்ல சத்தான உணவு, தரமான மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் இந்தியாவை காசநோய் இல்லாத நாடாக மாற்றுவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
இதன் அடிப்படையில் கொண்டு வரப்பட்டது தான் நிக்ஷய் போஷன் யோஜனா திட்டம் (Nikshay Poshan Yojana Scheme). இந்த திட்டத்தின் மூலம் மத்திய அரசு காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 நிதியுதவி வழங்கி வருகிறது.
மத்திய அரசால் 2018-ல் தொடங்கப்பட்ட இத்திட்டம், காசநோய் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து ஆதரவிற்காக ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட நோயாளிக்கு சிகிச்சை முடியும் வரை உதவித்தொகை அளிக்கப்படுகிறது.
அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வரும் நபருக்கு காசநோய் இருப்பது கண்டறியப்பட்டவுடன், சுகாதாரப் பணியாளர்கள் நோயாளியின் வங்கிக் கணக்கு விவரங்களைச் சேகரித்து நிக்ஷய் போர்ட்டலில் பதிவு செய்வார்கள். அப்படி அந்த நபரின் பெயர் பதிவு செய்யப்பட்டதும், முதல் தவணையாக அவரது வங்கி கணக்கிற்கு ரூ.3,000 (முதல் மூன்று மாதங்களுக்கானது) வழங்கப்படுகிறது, அதன் பிறகு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை கிடைக்கும்.
தகுதிகள் :
* இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
* காசநோயாளிகள் மட்டும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.
* காசநோய் பாதிப்பு மருத்துவ ரீதியாக உறுதியாகியிருக்க வேண்டும்.
* ஏப்ரல் 1, 2018க்கு பின் நிக்ஷய் போர்ட்டலில் பதிவு செய்திருக்க வேண்டும் மற்றும் காசநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் அனைத்து நோயாளிகளும் தகுதியுடைவர்கள்.
* குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள் :
* ஆதார் அட்டை
* காசநோய் உள்ளதற்கான மருத்துவ சான்றிதழ்
* சமீபத்திய வங்கி கணக்கு அறிக்கை
* ரத்து செய்யப்பட்ட காசோலை
* வங்கி பாஸ்புக்கின் நகல்
* தொலைபேசி எண்
* காசநோயாளிக்கு வங்கிக் கணக்கு இல்லையென்றால் பாதுகாவலர்/பெற்றோரின் வங்கி விவரங்கள்
* குடும்ப உறுப்பினரின் வங்கிக் கணக்கை பயன்படுத்தினால், எழுத்துப்பூர்வ ஒப்புதல் படிவம்
-ஆதார் அட்டை உடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்காவும், செயலில் இருக்கும் சேமிப்பு கணக்காகவும் இருக்க வேண்டியது கட்டாயம்.
விண்ணப்பிப்பது எப்படி?
இந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விரும்பம் உள்ளவர்கள் அருகில் உள்ள அரசு சுகாதார மையத்திற்கு நேரடியாக சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் இந்த உதவித்தொகைக்கன விண்ணப்ப படிவத்தை வாங்கி பூர்த்தி செய்து தேவையான அனைத்து ஆவணங்களையும் அதனுடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் https://nikshay.in/Home/Index என்ற அதிகாரப்பூர்வ இணைதளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை பதிவிறக்கம் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
நிக்ஷய் போஷன் யோஜனா திட்டத்தின் கீழ் மாதந்தோறும் உதவித்தொகை வாங்குபவர்கள் திடீரென உதவித்தொகை வரவில்லை என்றால் விண்ணப்பதாரர் தேசிய உதவி எண் 1800-11-6666 ஐ அழைத்து புகார் செய்யலாம்.