

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் வரிப் பகிர்வுத் தொகையை விடுவித்தது மத்திய அரசு. மாநிலங்களின் மூலதனம் மற்றும் வளர்ச்சி செலவினங்களை வேகப்படுத்தும் வகையில், மத்திய அரசு 28 மாநிலங்களுக்கு ரூ.1,09,019 கோடியை வரிப் பகிர்வுத் தொகையாக விடுவித்துள்ளது.
இதில் தமிழகத்திற்கு மட்டும் ரூ.4,466 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இந்திய மாநிலங்கள் வளர்ச்சித் திட்டங்களை எவ்வித தடையும் இன்றி செயல்படுத்த இந்தத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது
மாநிலங்களுக்கு வழக்கமான மாதத் தவணைத் தொகையோடு, கூடுதலாக வரிப் பகிர்வுத் தொகை கணக்கிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. நடப்பு பொருளாதார ஆண்டு மத்திய பட்ஜெட்டில் (2026-27), மாநிலங்களுக்கு வரிப் பகிர்வு மூலமாக மொத்தம் ரூ.1 லட்சம் கோடிக்கும் மேல் வழங்க இருப்பதாக கூறப்பட்டது. இதில் 16வது நிதி ஆணையம் பரிந்துரைத்ததன் அடிப்படையில், மாநிலங்களின் வரிப் பகிர்வு பங்கு தொடர்ந்து 41 சதவீதமாகத் தக்க வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 5 மற்றும் 6-ம் தேதிகளில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று மத்திய அரசு வரிப் பகிர்வுத் தொகையை வெளியிட்டுள்ளது. இந்தத் தொகையின் மூலம் தமிழக அரசு மக்களுக்குத் தேவையான வளர்ச்சித் திட்டங்களில் கூடுதல் கவனத்தை செலுத்தும்.
மத்திய அரசு வெளியிட்ட நிதிப் பகிர்வில் அதிக மக்கள் தொகை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்திற்கு அதிகபட்சமாக ரூ.19,208 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் பீகார் மற்றும் மத்தியப்பிரதேச மாநிலங்கள் 2 மற்றும் 3வது இடத்தில் ஊள்ளன.
நிதிப் பகிர்வில் அதிகம் பெற்ற மாநிலங்கள்:
1. உத்தரபிரதேசம் - ரூ.19,208 கோடி
2. பீகார் - ரூ.10,845 கோடி
3. மத்திய பிரதேசம் - ரூ.8,010 கோடி
4. மேற்கு வங்கம் - ரூ.7,866 கோடி
5. மகாராஷ்டிரா - ரூ.7,022 கோடி
6. ராஜஸ்தான் - ரூ.6,460 கோடி
7. ஒடிஷா - ரூ.4,819
8. ஆந்திர பிரதேசம் - ரூ.4,597 கோடி
9. கர்நாடகா -ரூ.4,504 கோடி
10. தமிழ்நாடு - ரூ.4,466 கோடி
11. ஜார்க்கண்ட் - ரூ.3,660 கோடி
இன்று ஆந்திரப் பிரதேசத்தில் புதிய விமான நிலையத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்த நிலையில், மாநிலங்களுக்கான வரிப் பகிர்வுத் தொகை வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தொகையின் மூலம் மாநில அரசுகள், வளர்ச்சித் திட்டங்களை உடனடியாக செயல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்றிய அரசு பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கும் வரி வருவாயில், ஒரு குறிப்பிட்ட தொகையை, அனைத்து மாநிலங்களின் வளர்ச்சிப் பணிகளுக்காகவும் சட்டப்பூர்வமாக பகிர்ந்து வழங்குவது தான் வரிப் பகிர்வு.
பொதுமக்களிடம் இருந்து மத்திய அரசு வசூலிக்கும் ஜிஎஸ்டி மற்றும் வருமான வரிப் பணத்தை மத்திய - மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ளும். ஒன்றிய அரசு விதிக்கும் செஸ் போன்ற சிறப்பு வரிகள் மற்றும் கூடுதல் கட்டணத் தொகை, பகிர்வுத் தொகுப்பில் எடுத்துக் கொள்ளப்படாது. இந்தப் பணம் அனைத்தும் ஒன்றிய அரசுக்கே சொந்தம்.
ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு தொகை விடுவிக்கப்பட வேண்டும் என்பதைப் பரிந்துரைக்க 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிதி ஆணையம் அமைக்கப்படுகிறது. தற்போதைய நிதி ஆணையப் பரிந்துரை படி வரி வருவாயில் 41% வரிப் பணம் மாநிலங்களுக்கு விடுவிக்கப்படுகிறது