

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பாக்சர் ரக நாய்கள் கடித்து பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண் படுகாயம் அடைந்தார். டூவீலரை எடுப்பதற்காக வெளியே வந்த போது பாய்ந்து வந்து பெண்ணின் தலையில் பாக்சர் ரக நாய்கள் கடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜா அண்ணாமலைபுரம் குட்டி கிராமினி தெருவைச் சேர்ந்த உமாராணி (வயது 40) என்பவர் வீட்டிற்கு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை வீட்டிற்குள் நிறுத்துவதற்காக சென்ற பொழுது பக்கத்து வீட்டில் வளர்க்கப்படும் இரண்டு நாய்கள் உமாராணியை கடித்து குதறியது. இதில் தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவருடைய தங்கை கற்பகம் அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக அபிராமபுரம் காவல் நிலையத்தில் உமா ராணியின் கணவர் சுரேஷ் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து அபிராமபுரம் போலீசார் நாய்களின் உரிமையாளர்களான உமாராணியின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த குமாரிடம் விசாரித்து குமார் மற்றும் அவரது மனைவி கோடீஸ்வரி இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாக்ஸரக நாய்களை வீட்டில் கட்டி வைக்காமல் தகுந்த பாதுகாப்பின்றி தெருவில் விட்டதால் அருகில் வசித்தவர்களை கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாய்கள் ஏன் மனிதர்களை கடிக்கின்றன?
நாய்கள் மனிதர்களை கடிப்பதற்கு பயம், தற்காப்பு, தன் எல்லையை பாதுகாத்தல் அல்லது உணவு மற்றும் உடைமைகளைக் காத்தல் போன்ற காரணங்கள் முக்கியக் காரணங்களாக அமைகின்றன. நாய்கள் தன்னை ஆபத்தில் இருப்பதாக உணரும் பொழுதோ அல்லது யாராவது திடீரென மிரட்டும் போதோ தற்காப்புக்காகக் கடிக்கிறது. உடலில் காயம், வலி அல்லது உடல் நலக்குறைவு இருக்கும்பொழுதும் நாய்கள் தொடுவதை விரும்பாமல் கடிக்கும். ரேபிஸ் (வெறிநாய்க்கடி) போன்ற நோய்களாலும் ஆக்ரோஷம் அதிகமாகும். தான் வாழும் இடம், வீடு அல்லது தன் உரிமையாளரை வேறு யாரும் நெருங்கக் கூடாது என்று தடுத்துக் கடிக்கின்றன. தெரு நாய்கள் இனப்பெருக்கக் காலத்தில் மிகவும் ஆக்ரோஷமாகக் கூட்டமாகத் திரிந்து மனிதர்களைத் தாக்கக்கூடும்.
நாய்க்கடியை கவனிக்காமல் விட்டால் என்ன ஆகும்?
நாய்க்கடியை கவனிக்காமல் விட்டால் உயிருக்கே ஆபத்தான வெறிநாய் கடி (ரேபிஸ்) நோய், கடுமையான காயம் தொற்று மற்றும் தனுவாதம் (டெட்டனஸ்) போன்ற தீவிர உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும். கடித்த நாய்க்கு ரேபிஸ் இருந்தால், வைரஸ் நரம்பு மண்டலத்தை தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தும். இதன் அறிகுறிகள் வந்த பின் காப்பாற்றுவது மிகவும் கடினம்.
காயம் தொற்று (இன்ஃபெக்சன்) என்பது கடித்த இடத்தில் பாக்டீரியாக்கள் பரவி சீழ் பிடித்து, வீக்கம், கடுமையான வலி மற்றும் ரத்தத்தில் தொற்று உண்டாகலாம். தனுவாதம் எனப்படும் டெட்டனஸ்(Tetanus) என்பது காயம் வழியாக உடலுக்குள் செல்லும் கிருமிகளால் தாடை இறுக்கும், நடுக்கம் மற்றும் தசை வலி போன்றவை ஏற்படும்.
எனவே நாயை வளர்ப்பவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் சில உள்ளன. வளர்ப்பு நாய்களை தெருவில் விடாமல், மற்றவர்களுக்குத் தொந்தரவு தராமல் வளர்க்க வேண்டும். அத்துடன் அவற்றுக்கு சரியான உணவு அளித்தல் அதாவது அதன் வயது மற்றும் எடைக்கு ஏற்ப நல்ல உணவைக் கொடுப்பதும், உரிய காலத்தில் கால்நடை மருத்துவர் மூலம் முறையான தடுப்பூசி மற்றும் கிருமி நாசினி மருந்துகளைத் தருவது மற்றும் பாதுகாப்பான சூழலை உருவாக்குதல் போன்றவையும் முக்கியம்.