
சொத்து வரி என்பது தனிநபரின் அல்லது நிறுவனத்தின் சொத்துக்கள் மீது விதிக்கப்படும் வரியாகும். பொதுவாக அந்த நபர் அல்லது நிறுவனத்திற்கு சொந்தமான இடத்திற்கு அரசு வரியை விதிக்கும். தமிழ்நாடு அரசில் தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளான பேரூராட்சி , நகராட்சி மற்றும் மாநகராட்சி போன்றவற்றில் உள்ள கட்டிடங்கள் மற்றும் காலிமனையிடங்கள் போன்றவற்றிற்கு செய்யப்படும் வரி விதிப்பு சொத்து வரி எனப்படுகிறது. அதன்படி தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் கட்டிடங்களின் ஆண்டு வாடகை மதிப்பின் அடிப்படையில் சொத்துவரிக் கணக்கீட்டு முறை பின்பற்றப்பட்டு வந்தது. கட்டிடம் பயன்படுத்தப்படும் தன்மைக்கேற்ப ஒரு சதுர அடிக்குரிய குறைந்த மற்றும் அதிகபட்ச அடிப்படை வரியை தமிழ்நாடு அரசு நிர்ணயம் செய்துள்ளது.
சொந்தமாக வீடு, கட்டிடம், வணிக நிறுவனம் போன்றவற்றை வைத்துள்ளவர்கள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சொத்துவரி செலுத்த வேண்டியது கட்டாயம். அப்படி சொத்து வரிகட்ட தவறும் பட்சத்தில் சொத்துவரியுடன் சேர்த்து தனிவட்டியையும் சேர்த்து செலுத்த வேண்டியிருக்கும்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு, பிரதான நிதி ஆதாரமாக, சொத்து வரி வசூல் உள்ளது. பல ஆண்டுகளாக சொத்து வரி உயர்த்தப்படாமல் இருந்த நிலையில், 2022ல் ஒட்டு மொத்தமாக சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டு வீடுகளின் பரப்பளவு அடிப்படையில், 25 முதல், 100 சதவீதம் வரை, சொத்து வரி உயர்த்தப்பட்டது.
அதன்பின், 2023ல் உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் அடிப்படையில், ஆண்டுக்கு, 6 சதவீதம் வரை, உள்ளாட்சி அமைப்புகளே, சொத்து வரியை உயர்த்திக் கொள்ள, தமிழக அரசு அனுமதி வழங்கியதன் அடிப்படையில், பெரும்பாலான நகர்ப்புற உள்ளாட்சிகள், கடந்தாண்டில் சொத்து வரியை, 6 சதவீதம் அளவுக்கு உயர்த்தின. 2025 - 26ம் முதலாம் நிதியாண்டில், வெளிப்படையான அறிவிப்பு எதுவும் இல்லாமல், உள்ளாட்சி அமைப்புகள் சொத்து வரியை, 6 சதவீதம் உயர்த்தியது. இது, சொத்து வரி செலுத்த செல்வோரிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், 6 சதவீதம் உயர்த்துவது, வீட்டு உரிமையாளர்களுக்கு, கூடுதல் சுமையை ஏற்படுத்துவதாக உள்ளது.
அதேசமயம் சொத்து வரியை தாமதமாக செலுத்துவோருக்கு, அபராதமாக விதிக்கப்படும் வட்டி விஷயத்தில், வெளிப்படைத்தன்மை இல்லை.
ஒவ்வொரு வீட்டுக்கும் விதிக்கப்படும் சொத்து வரி விகிதங்கள், எதன் அடிப்படையில் எப்படி கணக்கிடப்படுகிறது என்பதை, அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் இதுவரை தெளிவுபடுத்த வேண்டும்.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி நடப்பு நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டிற்கான சொத்து வரி தாக்கல் செய்வது குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் சொத்து வரி செலுத்துவதற்கான காலக்கெடு மற்றும் அதை செலுத்துவதற்கான வழிமுறைகள் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய நடப்பு அரையாண்டுக்குரிய சொத்துவரியை சொத்து உரிமையாளர்கள் வரும் 30-ந் தேதிக்குள் செலுத்திடவேண்டும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. இதன் மூலம் மாதந்தோறும் விதிக்கப்படும் தனிவட்டி விதிப்பை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. சென்னை மாநகராட்சி வரி செலுத்துபவர்கள், அரசு இ-சேவை மையம், இணையதளம், நம்ம சென்னை செயலி, கிரெடிட், டெபிட் கார்டுகள், யு.பி.ஐ. சேவை, பே.டி.எம்., நெப்ட், ஆர்.டி.ஜி.எஸ்., மாநகராட்சி வருவாய் துறையில் உள்ள காசோலை எந்திரம், கியூ-ஆர் குறியீடு மற்றும் 94450 61913 என்ற வாட்ஸ் அப் எண் மூலமாகவும் சொத்துவரி செலுத்தலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
சொத்து உரிமையாளர்கள் சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரியை உடனடியாக செலுத்தி சென்னையில் வளர்ச்சி பணிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.