ஓணம் பண்டிகையை ஒட்டி சென்னை- கேரளா விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கேரள மக்களுடைய முக்கிய பண்டிகையான ஓணம் திருநாள் வரும் புதன்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. ஓணம் திருநாளைக் கொண்டாடுவதற்காக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் வசித்து வரும் கேரள மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல தொடங்கியுள்ளனர். பண்டிகைக் காலங்களில் சிறப்பு ரயில்கள், பேருந்துகள் இயக்கப்பட்டாலும் ரயில்களில் முன்பதிவு எப்பொழுதோ முடிவடைந்து விட்ட நிலையில், கடைசி நேரப் பயணங்களுக்கு பேருந்துகள் மற்றும் ரயில்களில் இடப்பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் பலரும் விமானப் பயணத்தையே நாடுகின்றனர்.
அத்துடன் ரயில்கள், பஸ்கள் மூலம் செல்லும்பொழுது பல மணி நேரம் பயணம் செய்ய வேண்டும் என்பதால் பலரும் விமானத்தில் செல்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனைப் பயன்படுத்தி விமான நிறுவனங்கள் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி உள்ளது மக்களை மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை எப்படி அனைத்து தமிழர்களாலும் ஒட்டுமொத்தமாக வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறதோ அதைப்போல் கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகையை மலையாளிகள் அனைவரும் ஜாதி மதம் கடந்து ஒட்டுமொத்தமாகக் கொண்டாடுகின்றனர். ஓணம் பண்டிகையைச் சொந்த ஊர்களில் தங்கள் குடும்பத்தினர், உற்றார் உறவினர்களுடன் கூடி கொண்டாடுவதற்காக கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பெருமளவு சென்னையில் இருந்து விமானங்களில் கேரளா செல்வதால் கொச்சி, திருவனந்தபுரம், கோழிக்கோடு, கண்ணூர் விமானங்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. சென்னையில் இருந்து இந்தப் பகுதிகளுக்குச் செல்லும் விமானங்களில் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளதால் மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.
சனி, ஞாயிறு விடுமுறை நாட்களோடு சேர்த்து ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்கு இன்று முதல் (சனிக்கிழமை) சென்னை விமான நிலையத்தில் இருந்து கொச்சி, திருவனந்தபுரம், கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய இடங்களுக்கு நிறைய பேர் விமானப் பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.
சென்னையில் இருந்து கொச்சி செல்வதற்கு வழக்கமாக 5,336 ரூபாய் கட்டணமாக இருந்த நிலையில் தற்பொழுது 14,843 ரூபாயாக அதிகரித்துள்ளது. சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்வதற்கு 5,853 ரூபாயாக இருந்த நிலையில், ஓணம் பண்டிகைச் சிறப்புப் பயணக் காலமான தற்போது இந்தக் கட்டணம் பல மடங்கு அதிகரித்து 14,700 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. கோழிக்கோடு செல்வதற்கு 6,158 ரூபாயிலிருந்து 17,678 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. இவ்வாறு பல மடங்கு விமான டிக்கெட் கட்டணங்கள் அதிகரித்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பண்டிகைக் காலங்களில் தங்களுடைய சொந்த ஊர்களுக்குச் செல்லத் துடிக்கும் நடுத்தர மற்றும் எளிய மக்களிடம் விமான நிறுவனங்கள் இப்படிப்பட்ட கட்டண கொள்ளையில் ஈடுபடுவது மிகுந்த மனவேதனையை அளிப்பதாக பயணிகள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே பண்டிகைக் காலங்களிலும், விடுமுறைக் காலங்களிலும் முறைகேடாக உயர்த்தப்படும் விமானக் கட்டணங்களை கட்டுப்படுத்த மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. அத்துடன் இதைப் போன்ற பண்டிகைக் காலங்களில் கேரள மாநிலத்திற்கு சென்னையிலிருந்து கூடுதல் விமானங்களை இயக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.