

சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பிரியா மாமன்ற கூட்டத்தில் முன் வைத்துள்ளார். இதில் மெரினா கடற்கரையில் ரோப் கார் சேவை கொண்டுவரப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இன்று காலை(பிப்.18) ரிப்பன் கட்டிட கூட்டரங்கில் சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டம் நடைபெற்றது. அப்பொழுது 2026-27 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மேயர் பிரியா தாக்கல் செய்தார். அதில் சில முக்கியமான திட்டங்களை மேயர் பிரியா அறிவித்தார்.
சென்னை மெரினா கலங்கரை விளக்கம் முதல் அண்ணா நினைவிடம் வரை ரோப் கார் சேவை திட்டம் முதற்கட்டமாக கொண்டுவரப்படும். இத்திட்டத்திற்கு மெரினா தொடங்கி பெசன்ட் நகர் வரை ரோப் கார் சேவையை கொண்டு வர சென்னை மாநகராட்சி திட்டம் கொண்டுள்ளது. இந்த ரோப் கார் இடையில் இரண்டு நிறுத்தங்களை கொண்டிருக்கும்; ஒன்று கண்ணகி சிலை, மற்றொன்று விவேகானந்தர் இல்லம். ஒரு கேபினில் 8 முதல் 10 நபர்கள் வரை அமர்ந்து பயணிக்க முடியும் என்றும், இது முழுக்க சூரிய மின்சக்தியால் இயங்கும் என்றும், சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து முறையாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சூரிய சக்தியால் இயங்கும் ரோப் கார் சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 2026-27 ஆம் ஆண்டு மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டம், சுற்றுலா பயணிகளுக்கு மெரினா கடற்கரையை மேலிருந்து காணும் வாய்ப்பை வழங்குவதுடன், போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும், சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்குமான புதிய அடையாளமாக அமையும். பொது-தனியார் பங்களிப்பு முறையில் ரோப் கார் சேவை தொடங்கப்படும். 2022 முதல் இதற்கான ஆலோசனைகளும், ஆய்வுப் பணிகளும் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில், சமீபத்திய பட்ஜெட் அறிவிப்பின் மூலம் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
மேலும் சில முக்கியமான திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது சென்னையில் 20 இடங்களில் ஸ்மார்ட் பார்க்கிங் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும்.
கோடைக் காலங்களில் சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு கோடை காலங்களில் மோர் வழங்கப்படும்.
சென்னை மாநகராட்சி பூங்காக்களில் மரங்கள் நடுவதன் மூலம் பிராணவாயு உற்பத்தி செய்வதற்கு ஏதுவாக ரூ.10 கோடியில் பசுமை சென்னை திட்டம் அறிமுகம் செய்யப்படும்.
வீடு இல்லாதவர்களுக்கு 12 கோடி ரூபாய் செலவில் தற்காலிக தங்குமிடம் அமைக்கப்படும்.
கருப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் ஹெச்பிவி சோதனை கிட் கொள்முதல் செய்ய சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அது பற்றிய விவாதம் கூட்டத்தில் நடைபெறும். விவாதத்திற்கு பின்பு பட்ஜெட் மீது ஒப்புதல் அளிக்கப்படும்.