
இந்தியாவில் உடல் எடை பருமனால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் இந்த எண்ணிக்கை 40 சதவிகிதமாக உள்ளது. உடல் எடையைக் குறைக்க வேண்டுமெனில் அதற்கு இயற்கையான உணவுக் கட்டுப்பாடு தான் சிறந்தது. இதனைத் தான் தற்போது கையில் எடுத்துள்ளனர் சென்னைவாசிகள். அதாவது உடல் பருமனைக் குறைக்க 87% சென்னைவாசிகள் உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்வதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள பெருநகரங்களில் பொதுமக்களின் ஆரோக்கிய செயல்பாடுகள் மற்றும் உடல் பருமன் குறித்த ஆய்வை சமீபத்தில் மேற்கொண்டது பிசிஆர்எம் (Physicians Committee for Responsible Medicine) என்ற மருத்துவ அமைப்பு. இந்த ஆய்வு முடிவில் சென்னைவாசிகள் உடல் எடையைக் குறைக்க மருந்தளையோ, ஊசிகளையோ நாடவில்லை என்பதும், இயற்கையான உணவுக் கட்டுப்பாட்டின் மூலம் எடையைக் குறைக்க விரும்புவதும் தெரிய வந்துள்ளது.
டெல்லி, சென்னை, மும்பை மற்றும் பெங்களூர் உள்பட பல பெருநகரங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்திய அளவில் 71% பேர் அசைவ உணவுப் பழக்கம் கொண்டவர்களாக உள்ளனர். இந்த எண்ணிக்கை சென்னையில் மட்டும் 86% என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் 40% பேருக்கு உடல் பருமன் தாக்கம் உள்ளது. இதனால் அவர்களுக்கு இதய நாள பாதிப்பு மற்றும் டைப் 2 சர்க்கரை வியாதி போன்றவை ஏற்படுகின்றன.
உடல் பருமனைக் குறைக்க சிகிச்சைகளையோ, மருந்து மாத்திரைகளையோ சென்னைவாசிகள் எடுத்துக் கொள்வதில்லை. மாறாக இயற்கையான உணவுக் கட்டுப்பாட்டு வழிமுறையை அவர்கள் பின்பற்றி வருகிறார்கள் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதிலும் 87% பேர் சைவ உணவையே எடையைக் குறைக்க உதவும் பிரதான உணவாக கருதுகின்றனர்.
இந்த ஆய்வில் பங்கேற்ற 93% சென்னைவாசிகள், உடல் பருமனைக் குறைக்க இயற்கையான முறையைக் கையாண்டுள்ளனர். இதில் 19% பேருக்கு உடல் எடை கணிசமாக குறைந்துள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்தியாவின் மற்ற நகரங்களில் சென்னை மக்கள் பின்பற்றும் உணவுக் கட்டுப்பாட்டை பின்பற்றுவதில்லை என்பதும் தெரிய வந்துள்ளது. உடல் பருமனே பல நோய்களுக்கு வழிவகுக்கும் என்பதால், சென்னை மக்கள் தற்போது விழிப்புணர்வுடன் செயல்படுவதாக பிசிஆர்எம் மருத்துவ அமைப்பு தெரிவித்துள்ளது.