

தற்போது ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு எனப்படும் கேஸ் பிரச்சினை உணவுப்பிரியர்களிடையே பெரும் பாதிப்பை கொடுத்து வருகிறது. நகரங்களில் வசிக்கும் பெரும்பாலான இளைய தலைமுறையினர் மற்றும் முதியவர்கள் என அனைவரும் தங்கள் பசிக்கு உணவகங்களையே நம்பி இருந்தனர். பல இளையவர்கள் ஹோட்டல்களுக்கு நேரிடையாக சென்றால் சில முதியவர்கள் ஆன்லைன் மூலம் தங்கள் உணவுகளை பெற்று வந்தனர்.
ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக உள்ளது. ஆம் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள LPG கேஸ் தட்டுப்பாட்டினால் மக்கள் தினசரி வாழ்க்கையில் பல பாதிப்புகளை சந்திக்கின்றனர். நகரங்கள் உள்பட பல ஊர்களில் உள்ள சிறிய ஹோட்டல்கள், டீ கடைகள் மூடப்பட்டதால் வெளியே சாப்பிடும் மக்கள் பாதிப்படைந்து உள்ளனர். வணிக ரீதியிலான எரிவாயு (Commercial Gas) விலை உயர்ந்ததால், முழு உணவு (Meals) மற்றும் பார்சல் கட்டணங்களும் சற்று உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால், வீட்டில் சமைக்க முடியாமல் அன்றாடக் கூலியில் வெளியே சாப்பிடும் தொழிலாளர்கள், கல்வி அல்லது வேலை நிமித்தமாக விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்கள் எனப் பலரும் தகுந்த உணவின்றி உணவுப் பிரச்சினைகளைச் சந்தித்து வருகின்றனர்.
கேஸ் தட்டுப்பாடு இதுவரை தந்த தாக்கங்கள் :
கேஸ் தட்டுப்பாடு சமாளிக்கும் விதமாக சில ஹோட்டல்கள் ஒரு நாள் அல்லது சில நாட்களுக்கு விடுமுறை அறிவித்தன.
கேஸ் சேமிக்க அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் உணவுகள் மற்றும் பொரிக்கும் உணவுகள் (fried items) மெனுவில் குறைக்கப்பட்டது. குறைந்த கேஸ் பயன்படுத்தும் இட்லி , தோசை போன்ற உணவுகள் மட்டும் மெனுவாக இருந்தது.
சமைக்கும் நேரத்தை(operating hours) குறைக்கும் வகையில் காலை மட்டும் உணவகங்கள் திறந்து இரவு நேர சேவையை நிறுத்தியது.
சில ஹோட்டல்கள் Swiggy / Zomato orders போன்ற ஆன்லைன் ஆர்டர்களை (Online orders) தற்காலிகமாக நிறுத்தினர்.
சரி உணவுக்குத் தான் டிமாண்ட் என்றால் டீ காபி விலையும் ஏறி இனி ஒரு நாளைக்கு ஒன்றுதான் என நாக்குக்கு கட்டளை போடுகிறது அறிவு. தற்போது ₹10 டீ ₹12 அல்லது ₹15 ஆகவும், ₹15 காபி தற்போது ₹18 அல்லது ₹20 ஆகவும் உயர்ந்துள்ளது.
இது ஒரு புறம் இருக்க சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் கேஸ் கட்டணம் 'Gas Charge' என்று தனியாக ₹9.50 பில்லில் வசூலிக்கப்பட்டது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் பெங்களூருவிலும் சில உணவகங்களில் ₹5 முதல் ₹10 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளதுடன், சில இடங்களில் ₹30 வரை எரிவாயு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
ஏற்கனவே உணவகங்களில் 5% GST வரி, பார்சல் பேக்கிங் சார்ஜ் மற்றும் சேவை கட்டணம் (Service Charge) எனப் பல கூடுதல் கட்டணங்கள் இருக்கும் நிலையில், தற்போதைய இந்த கேஸ் கட்டணம் இனி உணவகங்கள் செல்லும் உணவுப் பிரியர்களுக்கு கவலை தரும் விஷயமாகவே இருக்கப் போகிறது.
இந்நிலையில் இந்த பில் இணையத்தில் வைரலான நிலையில் இது உண்மையா என்று ஆராய்ந்து பார்த்தால் அது போலி என நிரூபிக்கப்பட்டுள்ளது.
X இல் தர்மேஷ் (@DHarshwal) என்ற பயனர், எலோன் மஸ்க்குடன் தொடர்புடைய செயற்கை நுண்ணறிவு கருவியான Grok ஐ டேக் செய்து சரிபார்ப்பை நாடினார். படத்தை ஆராய்ந்த பிறகு, க்ரோக், பில் செயற்கையாக உருவாக்கப்பட்டது என்ற முடிவுக்கு வந்தார்.