

சென்னை ரிச்சி ஸ்ட்ரீட், சவுகார்பேட்டை மற்றும் பார்க் டவுன் பகுதிகளில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை (ஜிஎஸ்டி சோதனை) என்ற பெயரில் மிரட்டி லஞ்சம் கேட்பதாகக் கூறி தமிழ்நாடு எவர்சில்வர் பாத்திர வியாபாரிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் கடைகளை அடைத்து வியாபாரிகள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜூலை 30ஆம் தேதி அன்று மாலை சென்னை சவுகார்பேட்டை மின்ட் தெருவில் உள்ள மகிபால் ஸ்டெயின்லெஸ் என்ற கடையில் ஜிஎஸ்டி கண்காணிப்பாளர் நிஷாந்த் தலைமையில் அஜீஸ், சுஷில் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையின் போது அதிகாரிகள் சட்டவிரோதமாக செயல்படுவதாகவும், கடந்த சில மாதங்களாகவே வரி வசூல் என்ற பெயரில் லட்சக்கணக்கில் மற்றும் கோடிக்கணக்கில் லஞ்சம் கேட்டு மிரட்டுவதாகவும் கூறி, ஸ்டீல் மார்க்கெட் அசோசியேஷன் அமைப்பைச் சேர்ந்த சுமார் 300 வியாபாரிகள் திரண்டு அதிகாரிகளை கடையின் உள்ளே வைத்து பூட்டி சிறை பிடித்தனர். வரி சோதனை என்ற பெயரில் மாதம் தோறும் தங்களை மிரட்டி லஞ்சம் கேட்பதாக வியாபாரிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டு பதற்றம் நிலவியது.
சோதனையிட வந்த 6 அதிகாரிகளில் 3 பேரிடம் முறையான அடையாள அட்டைகள் இல்லாததால் அவர்கள் போலி அதிகாரிகளாக இருக்கலாம் என்ற சந்தேகமும் வியாபாரிகள் மத்தியில் எழுந்தது. ஜிஎஸ்டி ஆணையர் (Commissioner) நேரடியாக வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். தகவல் அறிந்து வந்த யானைக்கவுனி காவல் நிலைய போலீசார் மற்றும் பூக்கடை துணை ஆணையர் வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
நீண்ட போராட்டத்திற்குப் பின்பு அதிகாரிகள் பத்திரமாக மீட்கப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் அவர்கள் உண்மையான ஜிஎஸ்டி அதிகாரிகள் என்பது உறுதி செய்யப்பட்டது.
இச்சம்பவத்தில் தாங்கள் சிறைபிடித்து வைக்கப்பட்டது தொடர்பாக யானைக்கவுனி காவல் நிலையத்தில் ஜிஎஸ்டி அதிகாரி நிஷாந்த் அளித்த புகாரின் பேரில் போலீசார், வியாபாரிகள் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்து கலவரம் செய்தது, மிரட்டல் விடுத்தது சட்டவிரோதமானது என்று கூறி வழக்குப் பதிவு செய்தனர்.
அதிகாரிகளின் பணிக்கு இடையூறு விளைவித்ததாக ஜிஎஸ்டி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 6 வியாபாரிகளைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வணிகர்கள் மீது வழக்கு பதிவு செய்ததை கண்டித்தும், அதிகாரிகளின் அத்துமீறலை எதிர்த்தும், அதிகாரிகளின் மிரட்டல் மற்றும் லஞ்சப் புகார்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சக வியாபாரிகள் போலீசாரால் விசாரிக்கப்படுவதைக் கண்டித்தும், தமிழ்நாடு வணிகர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சௌகார்பேட்டை மற்றும் பார்க் டவுன் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட எவர்சில்வர் பாத்திரக் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மொத்த வியாபார கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டு போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.
உயர் ஜிஎஸ்டி அதிகாரிகள் நேரில் வந்து விளக்கம் அளிக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் வணிகர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வரி என்ற பெயரில் மாதா மாதம் லட்சக்கணக்கில் அதிகாரிகள் லஞ்சமாக வசூலிப்பதை பொறுக்க முடியாமலேயே வியாபாரிகள் இவ்வாறு செய்ததாக தெரிவித்துள்ளனர். தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், முறையான அறிவிப்பு இன்றி சோதனை என்ற பெயரில் நடக்கும் லஞ்ச வேட்டையை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் வணிகர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் சென்னை சௌகர்பேட்டை மற்றும் பார்க் டவுன் வர்த்தகப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.